அரங்கேற்றம்: ஷிபானி சுப்பிரமணியன்
ஆகஸ்ட் 3, 2013 அன்று மிச்சிகனில் உள்ள லேக் ஒரையன் ஹைஸ்கூலில் செல்வி. ஷிபானி சுப்பிரமணியனின் 'மங்களாசரண்' நிகழ்வு அரங்கேறியது. அவர் கற்ற பரதநாட்டியம், கதக், மணிபுரி மற்றும் கிராமிய நடன வடிவங்களின் அரங்கேற்றமாக இது அமைந்திருந்தது. இப்படியொரு நிகழ்ச்சியை வழங்கிய மிச்சிகனின் முதல் தமிழ்ப் பெண் இவரே. குரு திருமதி. ரக்ஷா தவே நடத்திவரும் 'நர்த்தன் டேன்ஸ் அகாடமி'யில் பத்தாண்டுகளுக்கு மேலாக பலவித நடன வடிவங்களைப் பயின்றுவரும் ஷிபானி, தாமே பல நடன நிகழ்ச்சிகளை வடிவமைத்தும், பங்கேற்றும் பரிசுகள் பெற்றுள்ளார். இவர் பரதத்தை கலாரசனா நடனப்பள்ளியின் ஆசான் திருமதி. தேவிகா ராகவனிடம் பயின்றார்.

நிகழ்ச்சியை 'மணிபுரி' நடனத்தோடு தொடங்கிய இவர், பரதநாட்டியத்தில் பதம் மற்றும் வர்ணம் ஆகியவற்றை வழங்கினார். லதாங்கி ராகத்தில் அமைந்த "நீ மனமிறங்கி" என்ற பாடலுக்கு லாவகமாக வர்ணம் ஆடினார். அதே லாவகத்தை மராட்டிய கிராமிய நடனமான லாவணியில் வெளிப்படுத்தினார். மிக வித்தியாசமான ஒரு வடிவம் ராஜஸ்தானிய கட்புத்லி என்பதாகும். இதில் பொம்மலாட்ட பொம்மைகள்போல் ஆடினார். அடுத்து கதக் பாணியில் அபிநயம் பிடித்தார். ஒவ்வொரு நடனத்துக்கும் ஏற்ற ஆடை அணிகலன்களோடு தோன்றி அந்த பாவங்களைச் சிறப்பாகக் காண்பித்தார். முத்தாய்ப்பாக திரைப்பாடகர் ஹரிஹரன் பாடிய கஜல் பாடலுக்கு ஆடினார். ராகத்தின் நுட்பங்களான பரண், துக்கடா, தோடா போன்ற அம்சங்களைக் கொண்ட தரானா என்ற நடனத்துடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஷிபானி.

இவரது தந்தை சதீஷ் சுப்பிரமணியன், தாயார் வைஜயந்தி சதீஷ் இருவருமே நடனக் கலைஞர்கள், மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தில் பல பொறுக்களை ஏற்றுத் திறம்படச் செயலாற்றியுள்ளனர். தமிழிற்கு அருந்தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் திரு. சூரியநாரயண சாஸ்திரி அவர்களின் கொள்ளுப்பேத்தி ஷிபானி என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி சுந்தர்,
டெட்ராய்ட், மிச்சிகன்

© TamilOnline.com