அரங்கேற்றம்: ஸ்ரீநிதி திருமலை
மே 26, 2013 அன்று ஸ்ரீலலித கான வித்யாலயாவின் மாணவி செல்வி. ஸ்ரீநிதி திருமலையின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் கலிஃபோர்னியா மாநிலம் ஃப்ரீமாண்ட் ஓலோனி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சஹானா வர்ணம் நல்ல எடுப்பான ஆரம்பம். அடுத்து வந்த தியாகராஜரின் 'நன்னுவிடச்சி' மிகவும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. பிரதான கீர்த்தனையாக சங்கராபரணத்தில் 'சரோஜதள நேத்ரி'க்கு ஆலாபனையுடன் கல்பனாஸ்வரம் நிறைந்த சங்கதிகளுடன் ஸ்ரீநிதி பாடியது மிகவும் பாராட்டத்தக்கது. 'நிரவதி சுகதா', தீட்சிதர் கிருதியான 'பிருஹஸ்பதே', பந்துவராளியில் 'சிவ சிவ என ராதா' எல்லாமே அமுத மழை.

அடுத்துப் பாடிய ஆண்டாள் பாசுரமான 'வாரணமாயிரம்' குறிப்பிடத்தக்கது. பாடலின் ராக வரிசைகளும், பாடிய விதமும் மிகவும் ரம்மியம். இந்தப் பாடலை ராகமாலிகையாக அமைத்த குரு லதா ஸ்ரீராம் பாராட்டுக்குரியவர். திரு. பாலாஜி மஹாதேவன் மிருதங்கமும், திருமதி. சுசீலா நரசிம்மன் வயலினும் கச்சேரிக்கு அனுசரணையாக இருந்தன.

ஷீலா சம்பந்தம்,
ஃப்ரீமாண்ட்.

© TamilOnline.com