தெரியுமா?: தமிழ் ஆன்லைன் தமிழ்க் கல்வி நிதிக்கொடை
அமெரிக்காவில் தமிழ்க் கல்வி ஆதரிப்பது தமிழ் ஆன்லைன் அறக்கட்டளையின் நோக்கங்களில் ஒன்று. அவ்வகையில் சென்ற ஆண்டில் இரண்டு மாணவர்களுக்குத் தலா $1000 உதவித்தொகையை நமது அறக்கட்டளை வழங்கியது. நிதிநல்கை பெற்றோரும் அவர்களது ஆய்வு விவரமும் பின்வருமாறு:

கிரிஸ்டென் பெர்க்மன் வாஹா
கிரிஸ்டென் பெர்க்மன் வாஹா, டேவிஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மாணவி. வெஸ்ட்மவுன்ட் கல்லூரியில் 2006ல் ஆங்கில இலக்கியப் பட்டம் பெற்ற இவர் 2010 முதல் தமிழ் பயின்று வருகிறார். அவர் 19ம் நூற்றாண்டில் பிரிட்டன், இந்தியா, ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளிவந்த சமூக சீர்திருத்தப் புதினங்களையும், சுயசரிதங்களையும் ஆராய்ச்சி செய்கிறார். இவரது ஆய்வுக்கட்டுரை 'Readers Transformed: Translation, Education,and Women's Conversion narratives in nineteenth-century Britain and India', தமிழ், ஆங்கில,ஃப்ரெஞ்சு இலக்கியங்களில், பெண் கல்வி பற்றி ஒப்பீடு செய்கிறது. 19ம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்தாளரான கி. மாதவையா ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதியுள்ள புதினங்களையும், கவிதைகளையும் ஆராய்ச்சி செய்துள்ள இவர், நமது நிதியுதவி ஆராய்ச்சிக்காக பிரிட்டன் செல்ல பயன்பட்டது என்கிறார்.

மிட்செல் வின்டர்
மிட்செல் வின்டர் தமிழகத்தின் சமய மரபுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இதற்காக 2012ம் ஆண்டு, பேரா. அர்ச்சனா வெங்கடேசனுடன் தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். சங்கப் பாடல்கள், பல்லவர் குடைவரைக் கோவில்கள், சோழர் கோவில் கட்டடக்கலை ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்துள்ளார். இதற்காக மாமல்லபுரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்துள்ள இவரது ஆய்வின் ஒரு பகுதி ஆஸ்டினில் உள்ள டெக்சஸ் பல்கலையின் தெற்காசிய ஆய்வுகள் குறித்த இணைய இதழான சாகரில் வெளிவந்துள்ளது. டேவிஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் Linguistics and Religious Studies இளங்கலை மூன்றாம் ஆண்டு பயிலும் இவருக்கு, இந்தியாவில் காலனி அரசாங்கத்தின் மொழிக்கொள்கை, தென்னிந்திய சமயக் கவிதைகள், அமெரிக்காவில் தற்கால இந்து மதம் இவற்றில் ஆர்வம் உண்டு. தன் ஆராய்ச்சிப் பணிகளுக்காக அர்ச்சனா வெங்கடேசன் அவர்களிடம் தமிழ் பயின்று வருகிறார் இவர்.

பேரா. அர்ச்சனா வெங்கடேசன் (வழிநடத்துனர்)
மேற்கூறிய மாணவர்களை வழி நடத்துபவரும், ஜிளிலி அறக்கட்டளையோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு நாம் நிதி நல்க வழி செய்தவருமான பேரா. அர்ச்சனா வெங்கடேசன், டேவிஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலையின் ஒப்பீட்டு இலக்கியம் மற்றும் சமயக் கல்வித்துறை பேராசியார். அவர் கலைக்கான தேசிய நிதி ஒதுக்கீடு, ஹுமானிடீஸுக்கான தேசிய நிதி ஒதுக்கீடு, அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இண்டியன் ஸ்டடீஸ், ஃபுல்ப்ரைட் ஸ்காலர்ஷிப் ஆகிய உதவித் தொகைகளைத் தமது ஆராய்ச்சிகளுக்கெனப் பெற்றுள்ளார். இவரது The Secret Garland: Andal's Tiruppaavai and Nacciyar Tirumoli என்ற நூலை ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்ஸிட்டி ப்ரெஸ் 2010ல் வெளியிட்டது. இவரது அடுத்த புத்தகமான A Hundred Measures of Time: Nammalvar's Tiruviruttam, பெங்குவின் கிளாஸிக்ஸ் நிறுவனத்தாரால் ஏப்ரல் 2014ல் வெளியிடப்பட உள்ளது.

தொகுப்பு: மீனாட்சி கணபதி

© TamilOnline.com