சிகாகோவில் பொன்னியின் செல்வன்
மே 4, 2013 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆஸ்வேகா உயர்நிலைப் பள்ளியில் அபிராமி கலைமன்றம் வழங்கிய 'பொன்னியின் செல்வன்' நாடகம் மீண்டும் அரங்கேறியது. இசையரசி சுதா ரகுநாதன் அமரர் கல்கியின் 'காற்றினிலே வரும் கீதம்' பாடலைப் பாடி நாடகத்தைத் துவக்கி வைத்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்த்துரை கொண்ட நிகழ்வேடு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

அபிராமி ஃபைன் ஆர்ட்ஸ் குழுவின் பாகீரதி சேஷப்பன் 2009 ஆண்டு சான்பிரான்ஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தில் முதன் முறையாகப் 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் புதினத்தை நாடகமாக எழுதி இயக்கி வழங்கினார். (இதுபற்றி வாசிக்க). அதே நாடகம் என்றாலும், முற்றிலும் புதிய முகங்களாகச் சிகாகோவாழ் தமிழருடன் இணைந்து இந்நாடகம் வழங்கப் பட்டது. உடையலங்காரம், சிகையலங்காரம் மீண்டும் இதற்காகெனத் தயாரிக்கப்பட்டன. சான் ஃபிரான்ஸ்கோவில் நடந்ததைக் காட்டிலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற உந்துதலாலே சிகாகோ குழுவினர், ஓடும்படியான ஓடங்களை குந்தவைக்கும், பூங்குழலிக்கும் செய்திருந்தார்கள். குந்தவையின் ஓடம் நகர ஆரம்பித்ததும் மக்கள் பலத்த கரகோஷம் செய்தனர். நூலில் மணியம் அவர்கள் வரைந்திருந்த காட்சிகளைத் திரைச்சீலைகளாகச் செய்து கொணர்ந்தது நன்றாக இருந்தது. பல்லக்கு, அரசவைத் தூண்கள் தத்ரூபமாகச் செய்திருந்தனர்.

ஸ்ரீதரன் மைனர் இசை அற்புதம். நந்தினி பேய்போல் வந்து சுந்தர சோழரை அச்சுறுத்திய போதும், கடலில் புயல் வந்தது, கப்பலில் இடி ஆகியவற்றையும் இசையால் எடுத்துக் கூறியது அருமை. குந்தவை, வந்தியத் தேவர், அருள்மொழி வர்மர், சேந்தன் அமுதன், நந்தினி, ஆழ்வார்க்கடியான்,சுந்தர சோழர் ஆகியோர் நடிப்பு குறிப்பிடும்படி சிறப்பாக இருந்தது.

தமிழ் சங்கத்தின் மணிகண்டன் நடிகர்களை ஒருங்கிணைத்தும் ஸ்ரீதர், பாகீரதி அவர்களின் இயக்கத்திற்குப் பெரிதும் துணைபுரிந்தார். அறவாழி, சோமு ஆகியோரின் கடும் உழைப்பும் இதன் வெற்றியில் பெரும் பங்கு வகிக்கிறது. சிகாகோ தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஒரு நாடக இயக்குனர் "நான் இது போல கண்ணிமைக்கும் நேரத்தில் காட்சிகளும் திரைச் சீலைகளும் மாறுவதை வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் தான் பார்த்திருக்கிறேன். தமிழ் நாடகங்களில் பார்த்ததில்லை. சிகாகோக் குழுவினரால் இது போல ஒரு நாடகத்தை அளிக்க முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள்" என்று பாராட்டினார். அவர் மேலும், "நான் இந்த நாடகத்தைப் பலமுறை படித்தேன். இதில் ஒரு வரியைக் கூட மாற்ற இயலாது என்று புரிந்து கொண்டேன். அவ்வளவு சிறப்பாக பாகீரதி அவர்கள் நாடகமாக்கி உள்ளார்கள்" என்றார். கல்கி ரசிகரான சங்கத் தலைவர் அறவாழி, "பொன்னியின் செல்வனை நாடகமாக்க இயலாது என்றுதான் நினைத்திருந்தேன். அபிராமி ஃபைன் ஆர்ட்ஸும், சான்ஃபிரான்ஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றமும் செய்து காட்டியதும்தான், எங்களுக்கும் அதைச் செய்ய ஆர்வம் வந்தது" என்று கூறினார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com