டாலஸ்: 'ஜீவா'- நவீன நாட்டியம்
மே 19, 2013 அன்று லூயிஸ்வில் மெடிக்கல் சென்டர் கிராண்ட் தியேட்டரில், இந்திய கலாசாரப் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் இண்டிக் நாடகக் குழுமத்தினரின் 'ஜீவா' நாட்டிய நிகழ்ச்சி டாலஸில் நடைபெற்றது. வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட இயற்கையோடு உயிர் (ஜீவா) கொண்டுள்ள தொடர்பை உணர்த்தும் விதத்திலும் காட்சிகளும், நடனங்களும் அமைக்கப்பட்டிருந்தன. சூரியாஞ்சலி, பஞ்சபூத தத்துவம், வறட்சியின் கொடுமை, திருக்குறள் பாடல்களுடன் மழையின் அருமை, வாழப் போராடும் வேட்கை, இயற்கையை உணராமல் ஒதுங்கி இருக்கும் மனித குலம், கடலில் எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் பேரவலம், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழவேண்டிய அவசியம் என எட்டுவிதக் கருத்துக்கள் கொண்டு அமைந்த நிகழ்ச்சியை இறுதியில் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதத்தில் வடிவமைத்திருந்தார்கள். பரத நாட்டியம், யோகம், நாட்டுப்புற, மேற்கத்திய சாயல்களோடு புதிய வடிவில் அமைந்திருந்த நடனங்கள் கண்களுக்கு விருந்தாயின.

அனு சுரி, லதா ஸ்ரீவத்சா, புவனா வெங்கட்ராமன், சரிதா வெங்கட்ராமன், ஷாலினி வர்கீஸ், க்ருதி தாஜு ஆகிய நடன ஆசிரியர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு நடனம் அமைத்தும், பங்கேற்றும் இருந்தனர். இவர்கள் இணைந்து இண்டிக் நாடகக் கம்பெனியை 2008ம் ஆண்டில் உருவாக்கி நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார்கள். அடுத்து ஹூஸ்டன், பிட்ஸ்பர்க் நகரங்களில் நிகழ்ச்சிகள் வழங்க இருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்க: indiquedance@gmail.com

நிகழ்ச்சியை வழங்கிய இந்தியன் கல்சுரல் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் இந்திய அமெரிக்கக் கலாசாரத்திற்குப் பாலம் அமைக்கும் விதத்தில்,மேடை நிகழ்ச்சிகள், கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் எனப் பலவகையிலும் செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம். 1995ம் ஆண்டில் தொடங்கிய இது, உள்ளூர் மற்றும் இந்தியக் கலைஞர்களின் நாட்டிய, இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

சின்னமணி,
டாலஸ்

© TamilOnline.com