மசாலாவும் மருந்தாகும்
நாம் தினசரி உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்து பற்றி அறிந்து கொள்வது முக்கியமானது. மாவு, புரதம், கொழுப்பு ஆகிய சத்துக்கள் பற்றிப் பலமுறை அலசியுள்ளோம். இவற்றைச் சரிவிகித அளவில் உட்கொள்வது அவசியம். இதைத் தவிர வாசனைக்காகவும், சுவைக்காகவும், கண்ணுக்கு அழகாக இருக்கவும் என்று சில மசாலாப் பொருட்களை நாம் உணவில் சேர்ப்பதுண்டு. இவற்றில் பல நம் முன்னோர்களால் உடலுக்கு நன்மை விளைவிக்கும் என்று கருதப்பட்டதுண்டு. ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி முறைகளில் இவை மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அறிவியல் சான்றுகள்படி இந்த வாசனைப் பொருடகள் எந்த விதத்தில் உதவுகின்றன என்று அலசுவோம். உடலுக்கு நல்லது என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை என்றபோதும் சில பொருட்கள் தீயனவையாக இல்லையெனில் உட்கொள்வது உசிதம்.

எதிர் ஆக்சிகரணிகள் (Antioxidant) அறிவியல் சான்றுகளின்படிப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். அவை கொண்ட பொருட்களும் அவை தரும் நன்மைகளும் கீழேயுள்ள பட்டியலுல் தரப்பட்டுள்ளது.

பொருட்கள் நன்மை
கருஞ்சீரகம் மார்பகப் புற்றுநோய் தவிர்ப்பு. ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்புச் சத்து குறைத்தல்.
ஏலக்காய் எதிர் ஆக்சிகரணி. வயிற்று வலி நிவாரணம்.
கார மிளகாய்வலி நிவாரணம். அதிகம் உட்கொண்டால் வயிற்றுப் புண், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படலாம்
பட்டை நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும். வாய் துர்நாற்றம் போக்க உதவும். புற்றுநோய் அணுக்கள் பெருகாமல் தவிர்க்கலாம். வயிற்றில் H Pylori நுண்ணுயிர் கிருமி இருந்தால் உதவலாம்.
கொத்துமல்லிநுண்ணுயிர்க் கிருமிக் கொல்லி, கல்லீரலை பாதுகாக்க உதவும். நல்ல கொழுப்பை அதிகமாக்கவும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவும். வைட்டமின் C அதிகம். எதிர் ஆக்சிகரணி.
ஜீரகம்வாயுத் தொந்தரவுக்கு நல்லது. உலோகப் பொருட்களுடன் இணைந்து அவற்றை வெளியேற்றும் சக்தி கொண்டது. இதைச் Chelating Agent என்று ஆங்கிலத்தில் சொல்வர். இதனால் புற்றுநோய்களுக்கு உதவலாம். கணையம் மூலம் உணவுகளை செரிக்க உதவும்
கறிவேப்பிலைநீரழிவுக்கு உதவும்.
சோம்புஎதிர் ஆக்சிகரணி.
வெந்தயம்ரத்ததில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
பூண்டுஇருதய நோய், பல் சொத்தை, ரத்த அழுத்தம் குறைக்கும்.
இஞ்சிசிறுகுடல். பெருங்குடல் செயல்பாடுகளைச் சரி செய்யும்.
கண்டந்திப்பிலிவயிற்றில் ஏற்படும் நுண்ணுயிர்க் கிருமிகளை எதிர்க்க உதவும். குறிப்பாக அமிபியாசிஸ் நோயில் உதவும்.
வெங்காயம்ரத்த அழுத்தம் குறைக்கும். எதிர் ஆக்சிகரணி.
மாங்காய் வைட்டமின் A , C மற்றும் E அதிகம். எதிர் ஆக்சிகரணி.
மாங்காய் இஞ்சிநுண்ணுயிர்க் கிருமி கொல்லி எதிர் ஆக்சிகரணி.
வேப்பிலைHIV நோயில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவைப்படும் CD 4 அணுக்களை அதிகரிக்க உதவும். வைரஸ் எதிர்க்கத் தேவைப்படும் அணுக்களை அதிகரிப்பதாலேயே நம் முன்னோர்கள் அம்மைக்கு எதிராக இதை உபயோகித்தார்கள்.
குங்குமப் பூமன அழுத்தம் குறையவும், மாத விடாய்க்கு முன்னால் ஏற்படும் தொந்தரவுகளை (Pre menstrual symptoms) அடக்கவும் உதவும்,
ஓமம்எதிர் ஆக்சிகரணி. புற்றுநோய் தவிர்க்க உதவும். மாரடைப்பை உண்டாக்கும் ரத்த அடைப்புகளைக் குறைக்க உதவும்
மஞ்சள்புற்றுநோய் தவிர்ப்பு. நுண்ணுயிர்க் கிருமிக் கொல்லி. தோல் வியாதியான சொரியாசிஸ் தீர்க்க உதவும். வயது முதிர்ந்தவர்களுக்கு வரும் அல்ஷைமர் நோயைக் குறைக்க உதவும். வலி நிவாரணம் (COX 2 Inhibitor). மன அழுத்தம் குறைக்கும் என்று சீன ஆராய்ச்சிகள் சொல்கின்றன


புற்றுநோய் தவிர்ப்பு, குறிப்பாக மார்பகப் புற்று, (Melanoma), தோல் புற்று, விந்துச் சுரப்பி (Prostate) புற்று, கணையப் புற்று, மைலோமா என்று சொல்லப்படும் ரத்தப் புற்று ஆராய்ச்சிகளில் மஞ்சள் அதிகமாய் இடம்பெறுகிறது. புற்றுநோய் மருந்துகளுடன் (Paclitaxel) மஞ்சள் சேர்த்தால் பலன் அதிகமாகிறது. புற்றுநோயில் ஏற்படும் புதிய ரத்த நாளங்களை மஞ்சள் குறைக்கின்றது. இதனால் புற்றுநோய் பரவாமல் இருக்க வாய்ப்பு அதிகம். இதனால் தற்போது அமெரிக்கர்களிடையே மஞ்சள் மிகவும் பிரசித்தம். நாம் தினசரி சமையலில் தூவும் மஞ்சளை மாத்திரை வடிவில் மருந்துக் கடைகளும் நலவாழ்வுக் கடைகளிலும் விற்கிறார்கள். எனது பல நோயாளிகள், குறிப்பாக இந்தியர் அல்லாதோர், "மஞ்சள், இஞ்சி, பட்டை உடலுக்கு நல்லதா? இதற்கு அறிவியல் சான்று உள்ளதா?" என்று கேட்பதுண்டு. அதை விளக்க முற்பட்டதில் இந்தக் கட்டுரை உருவானது. தேடிப் பார்த்ததில் American Association of Physicians of Indian origin (AAPI) வெளியிட்டுள்ள மிக உபயோகமான நூல் ஒன்று இணையத்தில் கிடைத்தது. மேலும் விவரங்களுக்கு: aapiusa.org

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com