கீல்வாதம் (Gout)
இது பெரும்பாலும் ஆண்களைத் தாக்கும் நோய். சில சமயம் பெண்களையும் தாக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு மூட்டு மட்டும் வலிக்காலம். கால் முட்டி, கை முட்டி போன்ற இடங்களில் ஏற்படலாம். ஆனால் முக்கியமாக காலின் கட்டை விரல் பகுதி பாதிக்கப்பட்டு, வீக்கம் அல்லது சிவப்பு நிறமாகி, வலி பெருகுவது இந்த நோயின் முக்கிய அடையாளம். வலி அடிக்கடி வந்து போகலாம். வலி அதிகமாகி, அதே இடமே மீண்டும் மீண்டும் தாக்கப்படலாம்.

அறிகுறிகள்
* கால் கட்டைவிரலில் மூட்டு வலி மற்றும் வீக்கம்
* முழங்கை மூட்டு அல்லது கால் முட்டி வீக்கம்
* முட்டிகள் சிவப்பு நிறமாதல்
* காய்ச்சல் அல்லது சோர்வு
* அடிக்கடி வந்து போகும் வலி
* வலி மிக அதிகமாதல்

காரணங்கள்
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து உள்ளவர்களுக்கு இந்த நோய் வரக்கூடும். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகே இந்த நோய் தாக்கும். உடலில் யூரிக் அமிலம் அதிகமாகி, அது யூரேட் கற்களாக மாறி முட்டிகளில் அடைத்துக் கொள்வதால் இந்த நோய் ஏற்படுகிறது. உணவில் மிக அதிகமாகப் புரதம் இருந்தாலும் எற்படலாம். குறிப்பாக மாமிச உணவுகளும் (Red meat) மதுவும் அதிகம் உட்கொண்டால் இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகும். ஒரு சிலருக்குச் சிறுநீரகம் சரியாகச் செயல்படாமையால் யூரேட் கற்கள் மிக எளிதில் உருவாகலாம்.

பரிசோதனைகள்
இந்த நோய் குறிப்பாக எந்தவிதப் பரிசோதனையும் இல்லாமல் கண்டுபிடிக்கப்படும். சில வேளைகளில் ஊடுகதிர் பரிசோதனை செய்யப்படலாம். மூட்டின் உள்ளிருக்கும் நீரை எடுத்துப் பரிசோதிக்க வேண்டி வரலாம். இதில் இருக்கும் யூரேட் கற்களை வைத்து கீல்வாதம் இருப்பது உறுதிப்படும். ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு பரிசோதிக்கப்படலாம். அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் அடிக்கடி இந்த நோய் ஏற்படும். இதற்கென்று சில மாத்திரைகள் தேவைப்படலாம்.

மருந்துகள்
வலி மாத்திரைகளான Advil, Motrin தீர்வு கொடுக்கும். அதிகமாக வலி இருந்தால் மருத்துவச் சீட்டுடன் கிடைக்கும் வலி மாத்திரைகள் தேவைப்படும். அடிக்கடி வலி வருவோர் மது மற்றும் மாமிச உணவைக் குறைப்பதன்மூலம் வலி வராமல் தவிர்க்கலாம். இதையும் தவிர வலி குறைக்க Colchicine என்ற மருந்தும் கொடுக்கப்படலாம். மீண்டும் மீண்டும் வலி வந்து அவதிப்படுவோருக்கு Allopurinol என்ற மருந்தும் அளிக்கப்படும். சிலருக்கு ஸ்டீராய்டு மருந்துகள் தேவைப்படலாம்.

தவிர்ப்பு முறைகள்
நோய் அடிக்கடி வந்து தாக்காமல் இருக்க உணவில் மாமிசத்தையும் மது அருந்துவதையும் குறைக்க வேண்டும். அதிகமாகத் தண்ணீர் குடிப்பது நல்லது. சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். உணவில் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு ஆகிய மூன்றும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com