தைப்பூசப் பாதயாத்திரை
மூன்றாவது ஆண்டாகக் கன்கார்டு முருகன் ஆலயத்துக்கு பக்தர்கள் உற்சாகத்துடன் தைப்பூசப் பாதயாத்திரை சென்றனர். விரிகுடாப் பகுதியிலிருந்து மட்டுமின்றி, இவ்வாண்டு கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ், பேக்கர்ஸ்ஃபீல்ட், ஃபோல்சம் நகரங்களிலிருந்து பலரும், சென்ற ஆண்டு யாத்திரை பற்றித் தென்றல் பத்திரிகை வாயிலாகத் தெரிந்து, வந்திணைந்தனர். அதுமட்டுமல்ல, அலபாமாவிலிருந்து மூவரும், டெட்ராயிட்டிலிருந்து இருவரும் வந்தது இந்த ஆண்டின் பெரும் சிறப்பு. ஃப்ரீமாண்டிலிருந்து 22 பேர் ஜனவரி 25 அன்று காலை புறப்பட்டு அன்றிரவே சான் ரமோன் எதிரிலுள்ள மேரியட் ஹோட்டலில் வந்து தங்கிவிட்டனர்.

இந்த ஆண்டு குளிர்/மழை மிகவும் கடுமை. ஜனவரி 26 அன்று எப்படி இருக்கும் என்ற கேள்வி மனதில் இருந்தது. வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பதற்கேற்ப அன்று அதிகாலை லேசான தூவானம் பாத யாத்திரைத் தடத்துக்கு நீர் தெளித்துவிட்டது. நாள் முழுவதும் நடைக்கேற்ற தட்பவெப்பம். காலை 7 மணிக்கு சான் ரமோன் மத்திய பூங்கா அருகே பக்தர்கள் கூட ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 150 பேர் 7.30 மணியளவில் "கான்கார்ட் முருகனுக்கு அரோகரா" என்று குரல் எழுப்பியவாறு புறப்பட்டனர். மளமளவென 250 பேர் 8.20 மணி அளவில் புறப்பட்டனர். சிற்றுண்டி, மதிய உணவு என்று இடையில் இரண்டு நிறுத்தங்கள்.

வால்டன் பூங்காவிலிருந்து மதிய உணவுக்குப் பிறகு 12.45 மணிக்குக் கிட்டத்தட்ட 500 பேர் பயணத்தைத் துவங்கினர். ஒரு பெரிய கால்வாயை ஒட்டியே நடைபாதை. வழியில் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தண்ணீர், பழம், பழச்சாறு, மாம்பழ லஸ்ஸி என்று தடபுடலான கவனிப்பு. நடையின் வேகத்தை மெல்லக் கூட்டி 3.40 மணி அளவில் கோவில் வாசலைக் கண்டவுடன் மனதில் அளவில்லா மகிழ்ச்சி. முருகன் பெயரைக் கூவிக்கொண்டே வலம் வந்து தரிசனம் செய்து வலியெல்லாம் மறந்தனர். இவ்வளவு பேருக்குமான ஏற்பாடுகளைச் சீராகச் செய்து கொடுத்த சோலை மற்றும் குழுவினரைப் பாராட்டியாக வேண்டும்.

டெட்ராயிட் அன்பர்கள் விமான நிலையத்திற்குக் கடைசி நேரத்தில் வந்தபடியால், அவர்களால் பெட்டிகளை விமானத்தில் ஏற்ற முடியாமல் போனதாம். எப்படியோ அங்குள்ளவர்களிடம் பேசி, திரும்பி வரும்பொழுது எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி, அதை அங்கேயே வைத்துவிட்டு ஓடிப்போய் ஏரோபிரிட்ஜில் செல்கையில், விமானம் நகர்ந்துவிட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் சில நிமிடங்கள் உருண்டோட, விமானம் மீண்டும் பிரிட்ஜில் வந்து நின்று இருவரையும் ஏற்றிக்கொண்டதைக் கேட்டு நமக்குப் புல்லரித்துப் போனது. எல்லாம் அவன் செயல்.

கோவில் விஸ்தரிப்புக்கான நிதி திரட்டும் நடவடிக்கைகள் நன்கு நடந்து வருகின்றன. இந்தப் பணிக்கு உதவி செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள: odysee786@gmail.com

கணேஷ் பாபு,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com