டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
'மக்கள் சக்தி இயக்க'த்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி (82) சென்னையில் ஜனவரி 20, 2013 அன்று காலமானார். முன்னேற்ற உளவியலைப் பற்றித் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இதழ்களில் கட்டுரைகள் எழுதியதோடு ஏறத்தாழ 40 நூல்களாகவும் வடித்திருக்கிறார். சிறந்த ஆசிரியருக்கான விருதும், Fulbright Scholar என்ற கெளரவமும் பெற்றவர். இவர் எழுதிய 'எண்ணங்கள்' நூல் தமிழகக் கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது. இது 62 பதிப்புகளுக்கு மேல் வெளியாகி வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூலும்கூட. அண்ணா, எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி ஆகிய மூன்று முதல்வர்களுக்கும் நெருக்கமானவர். அறிஞர் அண்ணாவின் அமெரிக்கப் பயணத்தின்போது அவருடனேயே இருந்து தமிழகத்திற்குத் தேவையான பல தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தவர். எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆவதற்குமுன் அவரை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் மூலம் அமெரிக்கா அழைத்துவர ஏற்பாடு செய்தவர். நேர்மையான அரசு அமைய வேண்டுமென்றால் அரசியலில் ஆர்வம கொண்ட இளைஞர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம், சமுதாய ஈடுபாடு என்ற மூன்று நிலைகளில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் இவர். இதற்காகப் பல நிகழ்ச்சிகளை இளைஞர்களிடையே அவர் நடத்தினார். நதிநீர் இணைப்பை வலியுறுத்திய முன்னோடிகளில் ஒருவர்.

தனது அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற ஒரு புதிய சமுதாயத்தை தமிழகம் பெறவேண்டும் என்று விரும்பி 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் வேட்பாளராகத் தேர்தலில் நின்றார். இவரது சுயசரிதையான 'என்னை செதுக்கிய எண்ணங்கள்' ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று. தமிழர் வாழுமிடமெங்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டியவர். இயக்குநர் பாலச்சந்தர் 'உன்னால் முடியும் தம்பி' என்ற தலைப்பிலான படத்தின் கதாநாயகனுக்கு உதயமூர்த்தி என்ற பெயரைச் சூட்டியது இவர்மீதும், இவரது பணிகள்மீதும் அவர் கொண்ட அன்பு மற்றும் மரியாதையினால்தான். எம்.எஸ்.உதயமூர்த்தி தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகில் விளநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். சித்தார்த், அசோக் என்ற இரண்டு மகன்களும், கமலா என்ற மகளும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

தானும் நிமிர்ந்து நின்று, தமிழர்களையும் தலை நிமிர்த்த முயன்றபடியே இருந்த டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்திக்கு தென்றலின் அஞ்சலி.

அவரது நேர்காணல்: தென்றல், ஜனவரி 2010 இதழ்

ச. பார்த்தசாரதி

© TamilOnline.com