சென்னையில் திருவையாறு
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ஸ்ரீ தியாகராஜர் அவதரித்த திருவையாறில் தியாகராஜ ஆராதனையை வெகுசிறப்பாக நடத்துவது வழக்கம். இவ்விழாவில் புகழ் பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் கலந்து கொள்வார்கள். தியாகராஜ ஆராதனை விழாவில் கலந்து கொள்வதைப் பெருமை யாகக் கருதுவதும், தியாக ப்ரும்மத்துக்கு அஞ்சலி செலுத்துவதும் இசைக் கலைஞர் களின் வழக்கம். அதுமட்டுமல்லாமல் இவ்விழாவில் பங்கேற்க அவர்களுக்குள் கடும்போட்டியும் நடைபெறும்.

இத்தகைய சிறப்புப் பெற்ற தியாகராஜ ஆராதனை விழாவைச் சென்னையில் நடத்தி இசைக் கலைஞர்களையும் பிரியர் களையும் ஏன் மகிழ்விக்க கூடாது என்கிற எண்ணம் இசை ஆர்வலர்கள் சிலரிடம் தோன்றியதன் விளைவே 'சென்னையில் திருவையாறு'.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை புகழ்பெற்ற மெல்லிசைக் குழுவினரான லட்சுமணன் சுருதியுடன் இணைந்து ராஜ் தொலைகாட்சி, தினமலர், நாடக அகாடமி மற்றும் ரேடியோ மிர்ச்சி நிறுவனங்கள் செய்தன. இதில் கலாலயா யு.எஸ்.ஏ.வுக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

சென்னை காமராஜர் அரங்கத்தில் 2005 டிசம்பர் 21 முதல் 25 வரை நடைபெற்றது இந்த இசைவிழா.

டிசம்பர் 21-ம் தேதி காலை 9 மணிக்கு இசைவிழா துவங்கியது. திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவைப் போல மேடையில் இருபதுக்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடினர். பத்மபூஷண் பி.எஸ் நாராயணசாமி தலைமை தாங்கினார். திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா மேடை போலவே காமராஜர் அரங்கில் மேடை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரபல இசைக் கலைஞர்கள் பி.எஸ். நாராயணசாமி, ஓ.எஸ். அருண், கதிரி கோபால்நாத், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன், சீர்காழி சிவசிதம்பரம் உட்படப் பல மேதைகள் அடுத்தடுத்த நாட்களில் இசை விருந்து வழங்கினார்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஐந்து கச்சேரிகள் வீதம் நடத்தப்பட்டது.

சென்னைக்கே திருவையாற்றுச் சூழலைக் கொண்டு வந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் களைப் பாராட்டாதவர்கள் இல்லை.

கேடிஸ்ரீ

© TamilOnline.com