பேண்ட் எய்டு
அதுவரை அழுதுகொண்டிருந்த இனியாக் குட்டிக்கு
கலர் கலராய் பொம்மைகள் ஆடிய 'பேண்ட் எய்டு'
ஒட்டியதும், ஒடிப் போயிருந்தது
முட்டியில் சிராய்த்த வலி...

அது காயத்தை மட்டுமல்ல,
தழும்பையும் அழகாய் மறைத்து ஆற்றுமாம்..
எல்லாம் தெரிந்திருந்தது குட்டிச் செல்லத்துக்கு

"பெரியவங்களுக்கு பொம்மை பேண்ட் எய்டு இல்லியாம்மா?"
யோசித்தபடி கேட்டது இனியாக் குட்டி.

எப்படிச் சொல்வது...
பெரிய தாத்தா நெற்றியில் திருநீறும்
மாமா சொல்லும் "எல்லாம் முடியும்" கதைகளும்
வரன் தகையா டீச்சர் சித்தியின் அனாதை இல்லப் பராமரிப்பும்
கைம்பெண் பால்காரம்மாவின் வாஞ்சையும், புன்சிரிப்பும்
ஏன், நான் வளர்க்கும் பட்டாம்பூச்சிப் பூந்தோட்டமும்
வாழ்வு தந்த காயங்களுக்குப் போட்டுக் கொண்ட
வண்ணமயமான பேண்ட் எய்டுகள்தாம் என்று!

தேவி அருள்மொழி அண்ணாமலை,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com