அரங்கேற்றம்: சரஸ் சென் சிங்
செப்டம்பர் 2, 2012 அன்று, மில்பிடாஸ் நூலக அரங்கில் சரஸ் சென் சிங்கின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. புஷ்பாஞ்சலி, விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து வர்ணம். சங்கராபரண ராகத்தில் அமைந்த அம்பலவாணன் பாடல், நீர், நெருப்பு, ஆகாயம், பூமி, காற்று என்ற பஞ்சபூதங்களை வர்ணித்தும், பக்தர்களுக்காக அம்பலவாணன் நடத்திய திருவிளையாடல்களை விவரிப்பதாகவும் இருந்தது. அழகான அடவுகளோடும், நேர்த்தியான ஜதிகளோடும் பம்பரமாகச் சுழன்று ஆடி, அவையினரைக் கவர்ந்தார் சரஸ். சில சிவ தாண்டவங்களை அவர் நிகழ்த்திக் காட்டிய விதம் பிரமாதம். அதுவும் குறிப்பாக ஒரு காலை, தலைக்கு மேல் செங்குத்தாகத் தூக்கி, ஒரே நேர்கோடாக நின்றது, பலத்த கரகோஷத்தைப் பெற்றது. அவர் நடனம் பயின்ற திருச்சிற்றம்பலம் நடனப் பள்ளிக்கும், குரு தீபா மகாதேவனுக்கும் நிச்சயம் இந்தப் பெருமை சேரும். மொழி தெரியாவிடினும் பாடலின் பொருளை சிஷ்யைக்குப் புரிய வைத்த குரு தீபாவின் முயற்சியும், அவற்றை உள்வாங்கி உணர்ச்சிகளாக வெளிக் கொணர்ந்த சரஸ் சென் சிங்கின் உழைப்பும் பாராட்டுக்குரியன. பின்னர், தீராத விளையாட்டுப் பிள்ளைக்கு ஆடி, தில்லானா, வேங்கடவன் துதி பாடி மங்களத்தோடு நிறைவு செய்தார் சரஸ்.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன்சிடி, கலிஃபோர்னியா

© TamilOnline.com