அமலால் நிறையும் ரமலான்
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம்
பயபக்தி யாதென்று சோதிக்கும் மாதம்
வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்
வறியவருக் கீந்துவக்கும் ‘ஃபித்ராவின்’ மாதம்

குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்
குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்
திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்
திண்ணமுடன் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்
உடலுக்குப் பயிற்சிதரும் நெறிமுறைகள் ரமலான்
உயிருக்குள் உணர்வான சுடராகும் ரமலான்
கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்
கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்

*****


ஷைத்தான் - இறைவனால் சபிக்கப்பட்டு நம் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை வழிகெடுக்கும் தீயசக்தி.
ஃபித்ரா - நோன்பில் ஏற்பட்ட தவறுகட்குப் பரிகாரமாக நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய தர்மம்
குர்-ஆன் - இறைவன் வழங்கிய இறுதி வேதம்
கல்பு - இருதயம்; உள்ளம்
ரமலான் - இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான (வைகறை முதல் அஸ்தமனம் வரை) நோன்பிருக்கும் மாதம்
திடலுக்கு - மஹ்ஷர் என்னும் தீர்ப்பு நாள் திடல் (judgement day ground)

கவியன்பன் கலாம்,
அபு தாபி

© TamilOnline.com