'பரதம்': நாட்டிய நிகழ்ச்சி
மே 12, 2012 அன்று குரு வனிதா வீரவல்லியின் 'பரதம்' நாட்டியப்பள்ளி மாணாக்கர்களின் வருடாந்திர நாட்டிய நிகழ்ச்சி ஆஸ்வேகோ கிழக்கு மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் சிறப்பாக நடந்தது. இந்தப் பள்ளி சிகாகோ பகுதியில் இருபது வருடங்களாக பரதநாட்டியக் கலையை வளர்த்து வருகிறது.

பள்ளியின் மூத்த மாணவியும் சென்ற ஆண்டு அரங்கேற்றம் செய்தவருமான மேரி ஆன் வழங்கிய நாட்டியாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, சிறு குழந்தைகள் ஆங்கில நர்சரிப் பாடல் ஸ்வரங்களில் ஆடிய 'உத்சாஹம்' நாட்டியம் ரசிக்க வைத்தது. வெவ்வேறு பிரிவுகளாக மாணவ மாணவியர் அலாரிப்பு, கவுத்துவம், கீத த்வயம், தோடய மங்களம், ஜதிஸ்வரம் என்று வரிசையாக விருந்தளித்தனர். நாராயண சப்தம் நாட்டியத்தில் கஜேந்திர மோக்ஷம், கீதோபதேசம், வாமனாவதாரம் ஆகியவற்றை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினர். ஸ்ரீ சப்தம் நாட்டியத்தில் பாற்கடலில் அன்னை மகாலட்சுமி தோன்றியதை நாட்டிய பாவங்களின் மூலமாக வெளிப்படுத்தினர். குரு வனிதாவும் மாணவியரும் சேர்ந்து ஆடிய 'சீதா ஸ்வயம்வரம்' கைத்தட்டலைப் பெற்றது. முத்தாய்ப்பாக தனஸ்ரீ ராகத் தில்லானாவும், பத்மவிபூஷண் பாலமுரளிகிருஷ்ணா இயற்றிய பெஹாக் ராகத் தில்லானாவும் இடம்பெற்றன. முடிவில் குரு வனிதா நன்றியுரை வழங்கினார்.

ஸ்ரீனிவாச ராமானுஜம்,
சிகாகோ.

© TamilOnline.com