அட்லாண்டா: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
மே 12, 2012 அன்று, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) மற்றும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் (CTA) ஆகியவற்றின் கீழ் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளின் மூன்றாம் ஆண்டு விழா, லேனியர் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்தக் கல்வியாண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன. விழாவில் நடந்த கலைநிகழ்ச்சிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. சங்கத் தலைவர் தங்கமணி பால்ச்சாமி வரவேற்றுப் பேசினார். கேட்ஸ் கல்விக்குழுத் தலைவர் சுந்தரி, குழுவின் சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் விளக்கினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ராட்லாஃப் (Mrs. Radloff) பள்ளி மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர்கள் தத்தம் பள்ளிகளின் ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரைப் பாராட்டிப் பேசினர்.

விழா ஒருங்கிணைப்பாளரான அனிதா தங்கமணி ஆண்டு மலரை வெளியிட, கேட்ஸ் பள்ளிகளின் முதல்வர்களான சுந்தரி, ரவி பழனியப்பன், ரவி முத்துசாமி, கலை பார்த்திபன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்ச்சிகளைச் செல்வி ஜெயஸ்ரீ நேர்த்தியாகத் தொகுத்தளித்தார். ராஜி முத்து நன்றியுரை வழங்க, இந்திய தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது.

சதீஷ் பாலசுப்பிரமணியன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com