நாட்யா: 'Pushed to the Edge'
ஏப்ரல் 14, 2012, சனிக்கிழமை அன்று, சிகாகோவின் நாட்யா டான்ஸ் தியேடர், மோர்டைன் & கோ தியேடருடன் இணைந்து 'Pushed to the Edge' என்ற புதிய படைப்பை வழங்க உள்ளனர். ஷெர்லி மோர்டைன் அவர்கள் தலைமையில் மோர்டைன் & கோ மத்தியமேற்குப் (midwest) பகுதியில் நெடுநாட்களாகத் தொடர்ந்து இயங்கிவருகிறது. இந்த நாட்டிய நிகழ்ச்சி, நாட்யாவின் ஹேமா ராஜகோபாலும், மோர்டைனும் 4வது முறையாக இணைந்து வழங்கும் படைப்பாகும்.

ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற 'Where the mind is without fear' என்ற கவிதையினால் உந்தப்பட்டு ராஜகோபாலனும், மோர்டைனும் இணைந்து 'Pushed to the Edge' என்கிற இந்தப் படைப்பை உருவாக்கியுள்ளனர். இதில் தாகூரின் பாடல் வரிகளுடன், இந்திய, மேற்கத்திய நவீன நடனபாணிகள் பின்னிப்பிணைந்து வழங்கப்பட்டுள்ளன. இப்படைப்பு, பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய இன்றைய சமுதாயத்தின் செழுமையை இடம்பெயர்தல், கருத்துப் பரிமாற்றம், சுய அடையாளம் ஆகியவற்றின் வாயிலாகப் பேசுகிறது; இருவேறு கலாச்சார வேர் உடையவர்களின் அடையாளக் குழப்பத்தை அலசுகிறது; உலகமயமாதலால் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும், லாபங்களையும் ஆராய்கிறது.

புகழ்மிக்க சித்திரவீணை ரவிகிரண் இதன் இசையமைப்பாளர். இவருடன் சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் ஜாஸ் சாக்ஸபோன் கலைஞர் ஜார்ஜ் ப்ரூக்ஸ் இணைந்து செயல்பட்டுள்ளார். ஜான் பூஷே தயாரித்த வீடியோ காட்சியையும் உள்ளடக்கிய இந்நிகழ்ச்சிக்கு, கென் பவன் ஒளியமைத்துள்ளார். ஜெஃப் ஹான்காக் ஆடை வடிவமைத்துள்ளார்.

இரு மாறுபட்ட கலைகள் மூலமாக ஒரே பிரச்சனையை அலசி ஆராய்ந்தது சவாலாக அமைந்ததோடு, நிறைவளிப்பதாகவும் இருந்ததாகக் கூறுகிறார் மோர்டைன். ஹேமா ராஜகோபாலனும், மோர்டைனும் 2007ல் முதன்முறையாக இணைந்து 'Two Rivers' என்ற படைப்பை வழங்கினர். 2008ல் கலாசார விழாவில் 'ஸஹிருதயா' என்ற நிகழ்ச்சியையும், 2010ல் 'Encountering the Other' என்ற மூன்றாவது படைப்பையும் வழங்கினர்.

நிகழ்ச்சி: Pushed to the Edge
நாள்: ஏப்ரல் 14 சனிக்கிழமை
நேரம்: இரவு 8 மணி
இடம்: North Shore Center for the Performing Arts, 9501 Skokie Boulevard
நுழைவுச்சீட்டு: $30 முதல் $38 வரை

முன்பதிவுக்கு:
தொலைபேசி: 847.673.6300
இணையதளம்: www.northshorecenter.org

மேலும் விவரங்களுக்குப் பார்க்க: www.natya.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com