தமிழ்ப் பள்ளிச் சிறார்!
செர்ரிப்பழத் தோட்டத்தில் மாங்கன்றுகள்.
குயிலிசை கேளாத, வியர்வை வாசம் பாராத,
குளிர் பிரதேசக் குருத்துகள்.

கோபுரமும், தாமரையும் என்னவெனக் கேட்டிடும்
மழலை மொட்டுக்கள்.

ஞகரம், ரகரம், ளகரம் வராமல்
அயலார்போல் அன்னை மொழி பேசும் அரும்புகள்.

தத்தம் பெயர்களின்
தவறான உச்சரிப்பே சரியெனப் பழகி
பாரதியும், வள்ளுவனும்
'ஃபன்னி' எனும் பிஞ்சுகள்!

ஒலி இன்றி தீபாவளியையும்
ஒளி இன்றி கார்த்திகையையும்
எப்படி விவரிப்பேன் இவர்கட்கு நான்?

ஆல நிழல், மல்லி மணம்,
செவ்விளநீர், நுங்குச் சுவை,
எதைச் சுட்டி மொழி பெயர்ப்பேன்
எனக்குத் தெரியவில்லை!

வேற்று மண்ணில், கலாசாரம் கலவாத
வெறும் மொழிக்கல்வி.
வேர்களை வெட்டி, கிளைகளை வளர்க்கும்
வீண் முயற்சியோ என விழித்தாலும்....

இயலும் என்றே முயல்கிறேன்!

அனுராதா சாயிநாதன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com