தென் கலிபோர்னியா தமிழ் மன்றத்தின் 'வசந்தத்தில் ஓர் நாள்'
மார்ச் 4, 2007 அன்று தென்கலிபோர்னியா தமிழ் மன்றத்தின் பல்சுவை நிகழ்ச்சியான 'வசந்தத்தில் ஓர் நாள்', இர்வைன் கோவில் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஏறத்தாழ 50 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை 6-10 வயது வரை உள்ள சுட்டிகள் பாடினர். காய்கறிப் பாட்டு, கண்ணைக் கவரும் காவடி நடனம், 'அலை பாயுதே கண்ணா' பரதநாட்டியம், 'வான் போலலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே' என்று கொஞ்சிய பொடிசு களின் நடனம், மிருகங்கள் சுத்தத் தமிழில் பேசி நீதி சொன்ன நாடகம் என்று பொடிசுகள் அசத்திவிட்டினர்.

'நாங்களும் சளைத்தவரல்ல' என்று பெரியவர்களும் அந்த நாள் முதல் இன்று வரை வந்த சினிமா பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். 'பாட்டிகள்' நாடகம் மூலம் அமெரிக்கத் தமிழாலும் சிரிக்க வைக்கலாம் என்று காட்டியது.

மன்ற நிர்வாகிகள் ஹரி ஆசுரி மற்றும் குமார் வெங்கட் விழாவில் பங்கு பெற்ற சிறாருக்குச் சான்றிதழ் வழங்கினர்.

ஆரஞ்ச், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இதர கெளன்டிகளில் வசிக்கும் தமிழர்கள் இந்தத் தமிழ் மன்றத்தின் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவோ கண்டுகளிக்கவோ விரும்பினால், மன்ற நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி: socal-tamil-manram@yahoo.com

அனு ஸ்ரீராம்
லாஸ் ஏஞ்சலஸ்.

© TamilOnline.com