சென்னையில் 'அப்யாஸ்' மார்கழி இசை
பாஸ்டனைச் சேர்ந்த குரு அபர்ணா பாலாஜி தமது 'அப்யாஸ்' (Abhyaas) இசைப்பள்ளி மாணவர்களுடன் சென்னைக்குச் சென்று மார்கழி இசை விழாவில் கலந்து கொண்டார். அபர்ணா பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆசார்ய சூடாமணி ஓ.வி. சுப்ரமண்யத்தின் பேத்தியும், சங்கீத சூடாமணி ஓ.எஸ். தியாகராஜனின் மகளுமான இவர் பல மேடைக்கச்சேரிகள் செய்து வருவதோடு தனது அப்யாஸ் பள்ளிமூலம் பாஸ்டனில் மாணவர்களுக்குச் சங்கீதப் பயிற்சி அளித்து வருகிறார்.

இவருடைய மாணவர்களான சசிதா கணேசா, சுமா ஆனந்த், கிரி ஆனந்த், அனீஷ் ஆகியோர் டிசம்பர் 25, 2011 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமியில் பாடினார்கள். சிறப்பாக ஸ்ரீரஞ்சனியில் ஆரம்பித்து தொடர்ந்து பாபநாசம் சிவன், கஜவதனா கருணா சாதனா என நல்ல தமிழ்ப் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடியது மனதிற்கு இதம். குறிப்பாகப் பூர்வி கல்யாணியில் 'ஆனந்த நடனமாடுவார்' பாடலை நால்வரும் ஒரே குரலில் பாடியது அசத்தல். தொடர்ந்து சங்கராபரணம், ராக ஆலாபனை, 'பாற்கடல் தரும்' அழகான கல்பனா ஸ்வரம் என அனைத்தும் அருமை. ஸ்ரீ வேங்கடேஷ ராவ் (வயலின்), ந.சி. பரத்வாஜ் (மிருதங்கம்) பக்கவாத்தியம் சிறப்பு. திருப்புகழ் பாடிக் கச்சேரியை நிறைவு செய்தனர் நால்வரும். நிகழ்ச்சியின் இறுதியில் அபர்ணா பாலாஜி மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.

கீதா பாஸ்கர்,
ப்ளசண்டன், கலிஃபோர்னியா

© TamilOnline.com