SCTS: பொங்கல் விழா
பிப்ரவரி 11, 2012 அன்று தென்மத்திய தமிழ்ச் சங்கத்தின் (South Central Tamil Sangam) பொங்கல் விழா மெம்ஃபிஸ் பெருநகரின் கோர்டோவா சமூகக் கலையரங்கில் கொண்டாடப்பட்டது. காலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து சங்க நிறுவன உறுப்பினர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தனர். நிறுவனர் குழு சார்பாக துரை கண்ணன் வரவேற்புரையில் சங்கத்தின் பணிகளை எடுத்துரைத்தார். பின்னர், சங்கத் தலைவர் செந்தில் சந்திரன் ஏற்புரையில் சங்க நிர்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினார்.

உள்ளூர் நாடக மன்றத்தைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைத்து வைத்துச் சிறப்புரையாற்றினார் மன்றத் தலைவர் சங்கரன். பொங்கல் விழாவின் நுண்ணிய கூறுகளையும், தமிழின் பெருமைகளையும் தன் உரைவீச்சில் வழங்கினார் கங்கா கல்யாண். அடுத்து, வந்த பொங்கல் காட்சியில் சுவை கூடியதும், எழில் கூடியதுமான படைப்புக்கு முதற்பரிசு வழங்கப்பட்டது. பவித்ரா இளங்கோவன் 'மெம்ஃபிஸ் நகரப் பொங்கலரசி' பட்டத்தை வென்றார்.

தமிழ்ப் பள்ளிச் சிறார் வழங்கிய கதம்பம் நிகழ்ச்சியில் ஆடல் பாடல்கள் இடம்பெற்றன. தீபா குழுவினர் வழங்கிய பொங்கலோ பொங்கல் இசைத் தாலாட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. மேடையின் பின்னணியில் பொங்கல் விழாவைச் சித்தரிக்கும் அழகிய மாடு மற்றும் குடில் கொண்ட கிராமியத்தைத் தம் கலைப்படைப்பால் அழகுபடுத்தியிருந்தனர் மஞ்சுளாதேவி, மோகன் குழுவினர்.

உணவு இடைவேளைக்குப் பின், கோலப் போட்டி, ஓவியப் போட்டி, மணித்துளியில் வெற்றி கொள், பகடையாட்டம் முதலான போட்டிகள் ஆரவாரத்துடன் இடம்பெற்றன. பதிவர் பழமைபேசி நடத்திய திரைப்படப் பல்லூடக விநாடி வினா நிகழ்ச்சி பங்கேற்றோரைக் களிப்பில் ஆழ்த்தியது. நிகழ்ச்சி பிற்பகல் நான்கு மணிக்கு நிறைவெய்தியது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ்ச்சங்க நிர்வாகிகள் செந்தில், சசிகுமார், விவேக், மது, மஞ்சுளாதேவி, சுகுமார், சாகர், வெங்கடேசன், வெற்றி, முருகேசன், சவீன் உள்ளிட்டோரை வாழ்த்தியும், வந்திருந்தோருக்கு நன்றி தெரிவித்தும் பேசினார் பதிவர் பழமைபேசி. ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் சித்திரைத் திருவிழாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அன்பர்கள்.

பழமைபேசி,
மெம்ஃபிஸ், டென்னஸி

© TamilOnline.com