ஸ்ரீராம லலித கலா மந்திர்: ‘நவக்கிரக வழிபாடு’ இசை நிகழ்ச்சி
மார்ச் 3, 2007 அன்று மாலை ஸ்ரீராம லலித கலா மந்திர் சங்கீத பள்ளி தலைவி ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்களும் மாணவ மாணவி களும் ‘நவக்கிரக வழிபாடு’ இன்னிசை நிகழ்ச்சியை பாலோ ஆல்டோவில் உள்ள கபர்லி அரங்கத்தில் வழங்கினார்கள்.

‘ஸ்ரீமஹா கணபதிம்’ (அடாணா) என்னும் பாடலை 10 மாணவிகள் சேர்ந்து பாடியது சுருதி சுத்தம். ஆரம்பமே களை கட்டியது. அடுத்து ‘சூர்ய மூர்த்தே’ எனும் சூரியகிரக வந்தனை, செளராஷ்டிரா ராகம். சூரியனுக்குரிய நிறத்தில் மாணவிகள் ஒரே மாதிரி உடையணிந்து ஒரே குரலாகப் பாடினர்.

சிவஸ்துதியை தொடர்ந்து ‘சந்த்ரம் பஜே’ எனும் அஸாவேரி ராகப்பாடலை ஆறு மாணவிகள் சந்திரனின் நிறமான வெள்ளை உடையில் சிறந்த உச்சரிப்புடன் பாடி அசத்தினர். அகிலாண்டேசுவரி பாடலை நான்கு ராகங்களில் மாணவிகள் பாடியது கேட்கப் பரம சுகம்.

‘அங்காரகம்’ என்னும் செவ்வாய் கிரகப் பாடலை ஆறு மாணவர்கள் அழுத்தமான குரலில் சேர்ந்து இசைத்தது சிறப்பு. ராசிக்கேற்ற வர்ணம் பொருத்தம். அடுத்து ‘மயில் வாகனா’ என்னும் முருகன் பாடல் மனதுக்கு இதம்.

‘புதமாச்ரயாமி’ எனும் புதகிரகத்துக்ரிய பாடலை மாணவிகள் பச்சை வண்ண உடையில் உச்சரிப்பு சுத்தத்துடன் பாடியது பரவசம். ‘வெங்கடாசல’ என்னும் புரந்தர தாசர் பாடல் தாளம் தவறாமல், சங்கதிகள் ஒரே மாதிரி ஒலித்ததுடன் முடிக்கும் போது ஒருகுரலிசை போல் இருந்தது.

‘பிருகஸ்பதே’ எனும் பாடலை அடாணா ராகத்தில் எட்டுப் பேர் குருவுக்குரிய மஞ்சள் வண்ண உடையில் பாடியது பிரமாதம். தொடர்ந்து ரஞ்சனியில் ‘தக்ஷ¢ணாமூர்த்தே’ விறுவிறுப்புடன் கூடிய ரம்யம்.

‘சுக்ரபகவந்தம்’ பாடலை வெள்ளை உடையணிந்து ஒரே குரல் போல் பாடியது கேட்க இதமாக இருந்தது. குறிஞ்சி ராக மகாலக்ஷ்மி பாடலும் ‘சிந்திஸ¤ன்னடே’வும் இனிமையுடன் கேட்கச் சுகம்.

திவாகர’ என்னும் சனி பகவான் பாடலுக்கு, கறுப்பு வண்ண உடையில், சிலர் கீழ் ஸ்தாயிலும் சிலர் மேல் ஸ்தாயிலும் பாடியது நல்ல எடுப்பாக இருந்தது. ‘ஸ்மரமாம்யஹம்’ என்னும் ராகு கிரகத்துக் குரிய பாடலை ஐந்து பேர் நீலம் கலந்த உடையில் சேர்ந்திசைத்தனர். பின் ‘துர்காதேவி’ என்னும் பாடலை அறுவர் நன்றாக சிட்டைஸ்வரத்துடன் அருமையாகப் பாடினர்.

கடைசியாக ‘மஹாஸ¤ரம் கேதும்’ எந்னும் பாடலை 15 பேர் பாடியது மிக்க எடுப்பாக இருந்தது. பல வண்ணம் கலந்த உடைகளில் கடைசியில் நவக்கிரக தில்லானாவில் மாணவ, மாணவிகள் யாவரும் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

அன்று இரவு ‘சந்திர கிரகணம்’ ஏற்படுவதற்கு முன்னால் சிறப்பு வழிபாட்டை தீட்சதரின் உருக்கமான ‘நவக்கிரக கீர்த்தனைகளை’ ஒவ்வொரு பாடல் முடிவிலும் பொருத்தமான விளக்கங்களுடன் கொடுத்தது வெகு சிறப்பு. மாணவ, மாணவிகளுக்குச் சிறந்த பயிற்சி அளித்து, நிகழ்ச்சியை அலுப்புத் தட்டாமல் ரசிக்கும் படியாக அளித்த ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ரங்கஸ்ரீ வரதராஜன் அவர்களின் வயலின், அர்ஜுன், பாலாஜி மகாதேவன், மேகா ரங்கநாதன் ஆகியோரின் சிறந்த பக்க வாத்திய ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி சோபித்தது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com