அடிகளாசிரியர்
முதுபெரும் தமிழறிஞரும், கடந்த ஆண்டுக்கான செம்மொழி தொல்காப்பியர் விருது பெற்றவருமான அடிகளாசிரியர் (102) ஜனவரி 8, 2012 அன்று விழுப்புரத்தில் காலமானார். இவர், 1910ம் ஆண்டு, கள்ளக்குறிச்சியை அடுத்த கூகையூரில் பெரியசாமி ஐயர், குங்கும அம்மாள் தம்பதியனருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் குருசாமி. இளவயதில் தந்தையை இழந்தவர், தாய் மாமன்கள் ஆதரவில் வளர்ந்தார். தமிழ், சம்ஸ்கிருதம், ஜோதிடம் ஆகியவற்றை நன்கு கற்றுத் தேர்ந்தார். 1937ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று, மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பொறுப்பேற்றார். பின் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். மறைமலையடிகளின் நட்பால் தம் பெயரை அடிகளாசிரியர் என தூய தமிழில் மாற்றிக் கொண்டார். தமிழோடு சைவத்தையும் நேசித்த இவர், சரஸ்வதி மகால் நூலகத்திற்காகப் பல அரிய நூல்களைத் தேடிப் பதிப்பித்தார். அருணகிரி அந்தாதி, மருதூரந்தாதி, கால சக்கரம், வராகர் ஹோரை சாத்திரம், சதமணி மாலை, சசிவண்ண போதம் மூலமும் உரையும் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பேராசிரியராகப் பணியாற்றிய அடிகளாசிரியர் பணி ஓய்வு பெற்ற பின்னரும் தமிழுக்காக உழைத்தார். இவருடைய ஆய்வுப் பணியைப் பாராட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 'தொல்காப்பியச் செம்மல்', 'செந்நாப்புலவர்', 'தமிழ்ப் பேரவை செம்மல்' போன்ற பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்காக இவர் செய்த தொல்காப்பிய ஆராய்ச்சி மிக முக்கியமானது. பின்னர் இவற்றை நூல்களாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இவ்வாராய்ச்சிக்காக இவருக்கு பாரத அரசின் தொல்காப்பியர் விருது வழங்கப்பெற்றது. கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியரான அடிகளாசிரியரின் இழப்பு தமிழ் ஆய்வுலகில் ஈடு செய்ய இயலாத இழப்பு.



© TamilOnline.com