தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை: 37வது தேசீய மாநாடு
தமிழ் நாடு அறக்கட்டளையின் (Tamil Nadu Foundation) 37வது தேசீய மாநாடு 2012 மே 25 தொடங்கி 28 தேதி வரை ஹூஸ்டன் (டெக்சஸ்) மாநகரில் நடைபெற உள்ளது. வழக்கமான கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம், கவியரங்கம், வழக்காடு மன்றம், நகைச்சுவை விருந்து, இசை இரவுகள், சொற்பொழிவுகள் எனப் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகள் அதில் இடம்பெறும். பேரா. கு.ஞானசம்பந்தன், 'சொல்லின் செல்வி' உமையாள் முத்து, பேரா. பர்வீன் சுல்தானா, புஷ்பவனம் குப்புசாமி-அனிதா தம்பதியர், திரைத்துறையிலிருந்து SP.முத்துராமன், சுகாசினி மணிரத்னம், 'ஞாபகம் வருதே' இசைத்தென்றல் பரத்வாஜ், இசை இளவல்கள் ராகுல் நம்பியார், ஹரிசரண், சைந்தவி மற்றும் பலர் மாநாட்டினை மகிழச் செய்ய வருகிறார்கள். அறக்கட்டளையின் வரலாற்றில் முதன்முறையாக 'நடனப்பேரொளி' மற்றும் 'பாட்டுக்குயில்' போட்டிகளை நடத்தித் திறமைவாய்ந்த இளையோர் இருவருக்கு 'TNF Idol' பட்டம் வழங்கப்பட இருக்கிறது.

தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தி விடும் மாணாக்கருக்கு, அவர்கள் கல்வியைத் தொடர நிதி உதவும் பொருட்டு 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற திட்டத்தை நடத்தி வருகின்றது. மாநாட்டில் திரட்டப்படும் நிதி தமிழகத்தில் கல்விக்கண் ஒளிரப் பயன்படும். இதற்கு ஆதரவு தரும் வண்ணம் அமெரிக்கா எங்கிலும் உள்ள தமிழர்கள் சுற்றம் சூழ வருகை தர வேண்டுமென்று அமைப்பாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலும் விபரங்களுக்கு - tnf-convention.org

கரு.மாணிக்கவாசகம்

© TamilOnline.com