பால்டிமோர் முருகன் கோவிலில் 'பராபரம்'
அக்டோபர் 22, 2011 அன்று பால்டிமோர் முருகன் கோவிலில் (Murugan Temple of North America) 'பராபரம்' என்ற கருத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. குரு கல்யாணி ஷண்முகராஜாவின் (லாஸ் எஞ்சலஸ்) சிஷ்யையான தாரிணி ஷண்முகராஜாவுடன் ஸ்ரீஜித் கிருஷ்ணா (சென்னை) இணைந்து இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியை வழங்கினர்.

ஸ்ரீஜித் கிருஷ்ணாவின் அற்புதமான நடன வடிவமைப்பில் கவியரசன் பாரதியின் சூரியன் (பாஞ்சாலி சபதத்தில் காணப்படும் வசனகவிதை) பேரொளி வீச நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்து வந்த மிஸ்ர சிவரஞ்சனி வர்ணத்தில் தேவி மீனாட்சியைக் கண்முன் நிறுத்தினார் தாரிணி. பூந்தானத்தின் 'கிருஷ்ண கிருஷ்ணா' பஜனைப் பாடலுக்கு ஸ்ரீஜித்தின் நடனம் பக்திப் பரவசம் ஊட்டியது. காலபைரவாஷ்டகத்துக்குப் பின்னர் வந்த லால்குடியின் பஹாடி ராகத் தில்லானாவுக்கு இருவரும் வெகு லாகவமாகப் பதம் வைத்தாடினர்.

இதே நிகழ்ச்சியை அக்டோபர் 16 அன்று லாஸ் ஏஞ்சலஸில் நடத்தினர். இரண்டு நிகழ்ச்சிகளிலும் திரட்டப்பட்ட 30,000 டாலர் தொகை முருகன் கோவிலுக்கு வழங்கப்பட்டது.

மோனிஷா ஜெயகுமார்

© TamilOnline.com