டொரோண்டோவில் 'இறவா வரம் தாரும்'
அக்டோபர் 15, 2011 அன்று மைக்கல் பவர் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத்திற்கு நிதி திரட்டும் வகையில் அக்ரஹாரம் ப்ரொடக்‌ஷன் குழுவினரின் 'இறவா வரம் தாரும்' என்ற நகைச்சுவை நாடகம் நடைபெற்றது.இந்த அருமையான நாடகத்தை எழுதி, இயக்கியதோடு அதில் நடிக்கவும் செய்திருந்தார் டாக்டர். ரகுராமன்.

மிக சுவாரசியமான கதை இப்படிப் போகிறது. சாவித்திரியின் சித்தப்பாவுக்கு அடிக்கடி மயக்கம் வருகிறது. வயதானவர்தான் என்றாலும் அவர் மயக்கத்தில் சொல்வது எல்லாம் பலிக்கிறதே! 'இன்று அடுத்த தெருவில் இன்னார் வீட்டில் எமனின் பாசக்கயிறு விழப்போகிறது' என்று ஏதாவது உளறி வைக்கிறார், அது நடந்துவிடுகிறது. சாவித்திரியின் கணவன் மார்க்கண்டேயனின் அண்ணா மயூரநாதனின் மூளை படுவேகமாக வேலை செய்கிறது. சித்தப்பா சொல்லும் வீடுகளுக்கு உடனே தொடர்பு கொண்டு மிருத்யுஞ்சய மந்திரம் சொல்ல வைக்கிறார். எமதர்மனின் பாசக்கயிறு மகுடி கேட்ட பாம்பாக சுருண்டு விடுகிறது. அவர்கள் பிழைத்து விடுகிறார்கள். மயூரநாதனின் பணப்பை பெருத்துக் கோண்டே போகிறது.

வேலையே இல்லாமல் போய்விட்ட எமதர்மன் பூலோகம் வரவேண்டியதாகிவிடுகிறது. பொலீஸ் அதிகாரி மார்க்கண்டேயன் நல்லவர். அவர் மனைவி சாவித்திரிக்கு “நல்லியில் எந்தப் புடவை புது டிசைனில் வந்தாலும் முதலில் வாங்கிவிடுவேன்" என்கிற கடினமான வேலை. வீட்டோடு இருக்கும் அண்ணா மயூரநாதன் நாடிமுத்து என்ற கேடியுடன் சேர்ந்து பணம் குவிப்பது பற்றி இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. நாடகப் பித்தர் டாக்டர். அஸ்வத்தாமன் ஒருநாள் கூட ஒழுங்காக ஒத்திகை பார்க்க விடாமல் போட்ட வேஷத்துடனேயே அழைத்து வர கான்ஸ்டபிள் எம்.என். நம்பியார் வேறு. இப்படி இவர்களைச் சுற்றிக் கதை சுழலுகிறது. சித்தப்பா குறிசொல்லும் போதெலாம், "ஆஹா. சொல்லிட்டார் சொல்லிட்டார். பணம் பணம்," என்று அண்ணா மயூரநாதன் குதிக்கும் போதெல்லாம் அரங்கத்தில் சிரிப்பு அலைதான். நகைச்சுவை மன்னன் நாகேஷை நினைவுபடுத்தும் நடிப்பு அண்ணா மணிக்கு. சித்தப்பாதான் ஒன்று வழுக்கி பாத்ரூமில் விழுவார் அல்லது தூங்கிக்கொண்டே இருப்பார். எமனாக நடித்த டாக்டர் ரகுராமனைப் பற்றிச் சொல்லாமல் இருக்கமுடியுமா. முறுக்கு மீசையும் கனத்த ஆபரணங்களுமாக வந்து ஒரு கலக்குக் கலக்கி விட்டார்.

மார்க்கண்டேயனாக வெங்கடேஷும், அண்ணா மணியும், சாவித்திரியாக வித்யாவும், கைலாசநாதனாக பார்த்தாவும், மலையாளத்தில் பேசிக்கொண்டு மஞ்சப்பாரா ரகு எம்.என். நம்பியாராகவும், சித்ரகுப்தனாக துரைக்கண்ணனும், ரமேஷ் நாடிமுத்துவாகவும், டாக்டர். கிருஷ்ணன் அஸ்வத்தாமனாகவும், பூமா காமினியாகவும் நன்றாக நடித்தனர். நாடகத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று இடைவேளையின் போது ரசிகர்களை எழுதிப் பெட்டியில் போடும்படி கேட்டுக்கொண்டு, அதற்கு நல்ல பரிசு ஒன்றும் அறிவித்தார்கள். வந்த நானூறுக்கும் மேற்பட்டவர்கள் முடிவைக் கணித்தனர். ஆனால்... ஒருவர்கூடச் சரியாகச் சொல்லவில்லை.

நாடகத்தின் சிறப்பில்,சிரிப்பில் மயங்கிய பல அமைப்புகள், ஆட்டவா, பகபலோ போன்ற இடங்களிலிருந்து கூட, நாடகத்தைத் தங்கள் ஊரில் வந்து நிகழ்த்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்படி ஒரு சூப்பர் நாடகம் இது!

ஹேண்டிகேர் மைப்பு 1992ல் கானடாவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்கு இயன்ற வகையிலெல்லாம் உதவி வருகிறது. அமர் சேவா சங்கத்தின் (பார்க்க: தென்றல், மே 2007) ஊக்கத்தில் தோன்றியது ஹேண்டிகேர். விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அமர் சேவா சங்க உடல்நலமற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக இந்தியா செல்லும் இளைஞர்கள் பலர் இந்தக் குழுவில் இருக்கிறார்கள். வெஸ்டர்ன் கலாசாலையிலிருந்து பத்து டாக்டர்களுக்குமேல் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவுக்குப் போய் அமர் சேவா சங்கக் குழந்தைகளுக்கு மருத்துவ சேவை செய்கிறார்கள். இதன் தலைவர் சுலோ கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நடப்பு எல்லாமே ஹேண்டிகேர் நிறுவனம்தான்.

அலமேலு மணி,
டொரோண்டோ, கானடா.

© TamilOnline.com