ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் பண்டிகைகள்
ஜார்ஜியாவிலுள்ள ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் கீழ்க்கண்டவாறு விழாக்கள் கொண்டாடப்பட்டன.

அக்டோபர் 23, 2011 அன்று தீபாவளி மற்றும் பக்ரித் பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. ஆசிரியைகளும் மாணவர்களும் அன்று பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். நான்காம் வகுப்பு மாணவ, மாணவிகள் தீபாவளி பற்றி கலந்துரையாடல் நடத்தினர். பின்னர் ஆறாம் வகுப்பு மாணவிகள் பக்ரித் பண்டிகை பற்றி விளக்கவுரை அளித்தனர். இரு பண்டிகைகள் பற்றியும் நான்காம் வகுப்பு மாணவர்கள் ஒலி, ஒளிக் காட்சி ஒன்றை வழங்கினர். முடிவில் இனிப்பு மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டன.

நவம்பர் 5 அன்று ஹாலோவீன் தினத்தில் குழந்தைகள் விதவிதமான உடையணிந்து வந்தனர். பள்ளி வளாகத்தில் ஹாலோவீன் அலங்காரம் செய்யப்பட்டு, பல விதமான மிட்டாய்கள் வைக்கப்பட்டிருந்தன.

நவம்பர் 20 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் புகைப்படத்திற்கு அலங்காரம் செய்து, குழந்தைகள் தினத்தின் நோக்கம், வரலாறு, உலக நாடுகளில் எவ்வாறு குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது போன்ற சுவையான தகவல்கள் விவரிக்கப்பட்டன.

நிகழ்ச்சிகளை தீபா சிவகுமாரும் அனிதா பாலுவும் புகைப்படம் எடுக்க, சிவகுமார் ஒளிப்பதிவு செய்தார். கவிதா அன்பரசன் பண்டிகை நிகழ்சிகள் பற்றிய குறிப்பேடுகள் தயாரித்து வழங்கினார். கொண்டாட்டங்கள் தலைமையாசிரியர் சுந்தரி குமார், உதவித் தலைமையாசிரியர் ராஜா வேணுகோபால் மற்றும் கலை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அனிதா தங்கமணி ஆகியோரின் மேற்பார்வையில் சிறப்பாக நடந்தது.

ராஜி முத்து,
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி (ATS)

© TamilOnline.com