அபிஷேக் இசை அரங்கேற்றம்
செப்டம்பர் 24, 2011 அன்று அபிஷேக் வெங்கடாசலத்தின் கர்நாடக இசை அரங்கேற்றம் கனாடாவின் டொரோண்டோவில் உள்ள யார்க்வுட் நூலக அரங்கில் பாரதி கலை மன்றத்தின் ஆதரவில் நடைபெற்றது. கனடாவில் பிறந்து, மேடையில் திரையிசை பாடி வந்த இளைஞனை, ஒரே ஒரு கச்சேரி கர்நாடக இசைக்குத் திருப்பி விட்டது என்றால் கொஞ்சம் ஆச்சரியமாக இல்லை? அதுதான் உண்மை. அபிஷேக் தன் தந்தை வெங்கடாசலத்துடன் கனடாவில் உள்ள மெல்லிசைக் குழுவினருடன் திரைப் பாடல்களைத்தான் பாடி வந்தார். குரு வசுமதியிடம் இசை பயின்றபோதும் மனம் நிலைத்தது திரையிசையில். ஆனால் 2008ல் மார்கழி மஹா உற்சவத்தில் ரஞ்சனி-காயத்ரி கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. இவர்களைப் போலப் பாட வேண்டும் என்ற ஆர்வம் தோன்ற, ராஜி கோபாலகிருஷ்ணனிடம் தீவிரமாகக் கர்நாடக இசை பயில ஆரம்பித்தார். சென்னை சென்றும், அவர் கோடை விடுமுறையில் டொரோண்டோ வரும்போதும் பயின்றார். 14 வயதில் ஆரம்பித்த பயிற்சி, 18ம் வயதில் கடந்த ஆகஸ்ட் 23ல் இரண்டரை மணி நேரக் கச்சேரியாக அரங்கேற்றம் ஆனது. பக்கவாத்தியமாக குரு பிரசாத் வயலினும், ஜனகனின் மிருதங்கமும் துணை நின்றன.

'நின்னு கோரி' வர்ணம் முடித்து, தர்மவதி ராகம் எடுத்ததும் இந்தப் பதினெட்டு வயதுச் சிறுவனால் தர்மவதி முடியுமா என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. ராகம் மட்டுமின்றி நிரவல் செய்து ஸ்வரமும் பாடி அசத்தி விட்டார் அபிஷேக். கரகரப்ரியா, சௌராஷ்டிரம் முடித்து, ஷண்முகப்ரியா ராகம் தானம் பல்லவி எடுத்தார். பல்லவியை மிக அழகாகப் பாடி, மோகனம், ரஞ்சனி போன்ற ராகங்களில் ஸ்வரமும் பாடி முடித்தார். பிறகு 'ஆரூர் சிதம்பரனை'க் கும்பிட்டு, 'நரஹரி தேவா ஜனார்த்தனா'வை வணங்கித் தொழுது தில்லானாவுடன் மங்களம் பாடினார், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் இந்த இளைஞர்.

அபிஷேக்கிற்கு நல்ல ஞானம். எந்த இடத்திலும் ராகமோ, தாளமோ தவறவே இல்லை. இன்றும் குருவின் ஒலி, ஒளி நாடாக்களைப் போட்டுப் பார்த்து பயின்று வருகிறார். வயலின் வாசித்த குரு பிரசாத் தர்மவதியிலும், கரகரப்ரியாவிலும், ஷண்முகப்ரியாவிலும் தன் திறமையை மிக அழகாக நிரூபித்தார்.

மிருதங்கம் வாசித்த ஜனகனுக்கு இசை தாகம் அதிகம். ஏழாம் வயது முதலே டொரொண்டோ திரு கௌரி சங்கரிடம் மிருதங்கம் பயில ஆரம்பித்தவர், பத்தாம் வயதில் க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனையின் போது ஜூனியர் போட்டியில் முதல் பரிசு பெற்றார். 15 வயதில் சீனியர் போட்டியில் முதல் பரிசு. திருச்சி சங்கரனின் பாராட்டுதலைப் பெற்ற ஜனகனின் குரு உமையாள்புரம் சிவராமன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஜனகன், ஒரு பாடலைப் பாடியவுடன் அது என்ன ராகம் என்று சொல்லும்படியான கணினி மென்பொருள் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார். கச்சேரியின் நிறைவில் பேரா. பசுபதி இளைஞர்களின் திறமையைப் பாராட்டிப் பேசினார்.

அலமேலு மணி,
டொரொண்டோ, கனடா

© TamilOnline.com