சங்கரா கண் அறக்கட்டளை நிதிக்காகப் பல்லவியின் 'கண்மணியே'
நவம்பர் 20, 2011 அன்று மாலை 5:00 மணிக்கு Performing Arts Center, Chabot College, Hayward வளாகத்தில் சங்கரா கண் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் பொருட்டு 'பல்லவி' இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சான் ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் சங்கரா கண் அறக்கட்டளையின் அமெரிக்கக் கிளை 1999ல் புதிதாய்த் துவங்கப்பட்டு, அதன் முதல் நிதிதிரட்டு விழாவில் பல்லவி மெல்லிசைக் குழுவினர் பாடினர். அக்காலத்தில், கோயம்புத்தூரிலுள்ள ஒற்றை மருத்துவமனை மூலம் 8000 பேருக்குக் கட்டணமில்லாமல் கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இன்று, இந்தியா முழுதிலும் எட்டு மருத்துவமனைகள், 120,000 பேருக்கு இலசவச கண் அறுவைச் சிகிச்சை என்று சங்கரா வளர்ந்து நிற்கிறது. இன்னும் வளரவிருக்கிறது. மீண்டும் பல்லவி இசைக்கும் நேரம் இது....

உலகின் பார்வையற்றோரில் ஐந்தில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர் இவர்களில் 12 மில்லியன் பார்வையற்றோர், 45 மில்லியன் பார்வை குறைபட்டோர். ஆனால், 80 சதவிகிதத்தினரது பார்வைக் குறைகளைக் கண் மருத்துவம் மூலம் குணப்படுத்த இயலும். இத்தகைய மருத்துவ வசதியைப் பரவலாகவும் கட்டணமின்றியும்--சங்கரா கண் நல நிறுவனங்கள் துணையுடன்--மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதே சங்கரா கண் அறக்கட்டளையின் குறிக்கோள்.

1977ல் கோயம்புத்தூரில் சிறிதாகத் துவங்கிய சங்கரா மருத்துவமனையில் தற்போது 400 படுக்கைகளும் அதிநவீன மருத்துவ வசதிகளும் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் பார்வைக் குறையுள்ளோரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, தங்கும் வசதி செய்து, அறுவை சிகிச்சை செய்து, பின்னர் அவர்களைத் திரும்பக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்கின்றது--முழுவதும் இலவசமாய். சென்ற ஆண்டு கோயம்புத்தூரில் மட்டுமே, 35,000க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன, அவற்றில் 98.5% முழுவெற்றி என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளை சங்கரா கண் நல நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன.

'20/20 பார்வை' என்று பெயரிடப்பட்ட செயல்திட்டத்துடன், குணப்படுத்தக்கூடிய பார்வைக்குறை உள்ளோர் அனைவருக்கும் 2020-ஆம் வருடத்துக்குள் நிறைபார்வை வழங்கும் பெருமுயற்சியில் தற்போது சங்கரா ஈடுபட்டுள்ளது. 2020க்குள், குறைந்தது 20 மருத்துவமனைகள் மூலம் 1 மில்லியன் கண்சிகிச்சைகள் செய்யப்படும். இந்த வேகத்தில் வளர்வதற்காக, சங்கரா ஒரு 80-20 விதி வைத்துள்ளது. அதாவது, எவ்விதக் கட்டணமும் இல்லாமல் அறுவைச் சிகிச்சை பெறுவோர் 80 சதவிகிதத்தினர்; மிச்சமுள்ள 20 சதவிகிதத்தினர் கட்டணம் செலுத்தும் வசதியுள்ளவர்கள். இவ்வாறு ஐந்து வருடங்களுக்குள் சங்கரா மருத்துவமனைகள் அனைத்தும் நிதித் தன்னிறைவு அடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது; இரண்டு மருத்துவமனைகள் ஏற்கெனவே இந்த மைல்கல்லை அடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடாப் பகுதியின் 'பல்லவி' மெல்லிசைக் குழு 15 வருடங்களில் பெருவளர்ச்சி அடைந்ந்துள்ளது . பல்லவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பாடலும் ஆடலும் தொழில்நுட்பமும் கலந்த இசைக் கொண்டாட்டம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒன்றான சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், முத்தமிழ் வளர்க்கும் லாபநோக்கற்ற நிறுவனம். நிகழ்ச்சிக்குப் பேருதவி செய்திருக்கும் திருப்பதி பீமாஸ் உணவகம் இந்தியாவிலுள்ள ஏழைமக்களுக்கான பல்வேறு தொண்டுகளுக்கும் நிதி திரட்டும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ஆதரவு தரும் சேவைமனம் கொண்டது.

நிகழ்ச்சிக்காக 'கோவைக் குழு' என்கிற கோயம்புத்தூர்த் தன்னார்வலர் குழு துடிப்போடு உழைக்கிறது. கோயம்புத்தூரிலுள்ள சங்கரா கண் மருத்துவமனை இன்னமும் 95 சதவிகிதச் சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது; அதன் பொருளாதாரத் தன்னிறைவுக்காகக் கோவைக் குழு இந்த இன்னிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

Event: 'KaNmaNiyE' - Light Music Program by Pallavi
Date: November 20, 2011, Sunday, 5:00 PM.
Venue: Chabot College, Performing Arts Center, Hayward.
Tickets: VVIP, VIP, $25, $20, $15, $10
website: www.giftofvision.org

© TamilOnline.com