பாவனா கிருஷ்ணா நாட்டிய அரங்கேற்றம்
ஜூலை 22, 2011 அன்று பாவனா கிருஷ்ணாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஹன்ட்ஸ்வில், மாடிசன், பாப் ஜோன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சிவா, அனு கிருஷ்ணா தம்பதியரின் புதல்வியான பாவனா, மூன்று வயதிலிருந்து நாட்டியம் ஆர்வம் கொண்டவர். திருமதிகள் நிதி ரெட்டி, வித்யா வெங்கடரமணி (ஒஹாயோ), துளசி ராமச்சந்திரா (மைசூர்), காயத்ரி சுஸ்வரம் (சிவதலா நாட்டியப் பள்ளி, நியூ ஜெர்சி) மஹாலக்ஷ்மி வரதன் (நூபுரா நாட்டியப் பள்ளி, சிகாகோ) ஆகிய குருக்கள் பாவனாவின் ஆர்வத்தைத் திறமையாக மாற்றியமைத்து மேடையேற்றி உள்ளனர்.

நாட்டை ராகப் புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பித்த நாட்டியம், 'ஆனந்த நர்த்தன கணபதிம்' அலாரிப்பு, 'சின்னி கிருஷ்ண' வர்ணத்துடன் சிறப்பாகத் தொடர்ந்தது. பாவனா, சப்தம் தண்டை முழங்க, சிவசக்தம், பாதம் யாதவராய என மேலே நடந்து, இறுதியில் ஹிந்துஸ்தானி சுலோகத்துடன் நாட்டியத்தை முடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்துஸ்தானியில் பாடல்களைத் தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது. இவற்றில், பெரும்பான்மையான பாடல்களுக்கு மஹாலக்ஷ்மி வரதன் நாட்டிய வடிவமைப்புச் செய்திருந்தார்.

வீணை மற்றும் வயலினிலும் தேர்ச்சி பெற்றவரான பாவனா, பாப் ஜோன்ஸ் உயர்நிலைப் பள்ளியில், ஆனர்ஸில் தேர்ச்சி பெற்றவர். பர்மிங்ஹாமிலுள்ள அலபாமா பல்கலையில் வணிக நிர்வாகவியல் படிக்கப் போகிறார் பாவனா கிருஷ்ணா.

பிருந்தா ஐயர்,
ஹன்ட்ஸ்வில், அலபாமா

© TamilOnline.com