ATMA ஏழாம் ஆண்டு மாநாடு
2011 ஆகஸ்ட் 11 முதல் 14 வரை, அமெரிக்கத் தமிழ் மருத்துவர்களின் ஒரே அமைப்பான 'ஆத்மா'வின் (American Tamil Medical Association) ஏழாம் ஆண்டு மாநாடு வடகரோலினா மாநிலத் தலைநகரின் ஒரு பகுதியான டுரம் (Durham) நகரில் நடைபெற்றது. அமெரிக்காவின் பல மாகாணங்களிலிருந்தும் நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். முக்கிய விருந்தினராகச் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். மயில்வாகனன் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் ஆத்மா மருத்துவர்களுடன் இணைந்து பல்வேறு ஆக்கத்திட்டங்களுக்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் துணைபுரியும் என அறிவித்தார்.

பயிற்சி மருத்துவத்தில் (Residency) திறமைகாட்டிப் பெருமைகளைப் பெற்ற டாக்டர். குமார் இளங்கோவன், டாக்டர். (குமாரி) கல்பனா மந்திரம், ஆராய்ச்சிப் படிப்பில் (Research) சிறந்து விளங்கும் டாக்டர். ராஜா கோபால்தாஸ், சிறந்த பொதுப்பணிப் பிரிவில் (Public Service) திருப்பூர் ஏ.ஜி. மருத்துவமனைகளின் நிறுவனர் டாக்டர். முருகநாதன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சுனாமி, பூகம்பம் போன்ற நிகழ்வுகளில் சிறப்பாக அவசர மருத்துவ உதவி அளித்தலில் தலைமைப் பொறுபேற்றுப் பெரும்பணி ஆற்றிய கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. பணிபுரியும் மருத்துவர்களுக்குத் தேவையான 'தொடரும் மருத்துவக் கல்வி'க்கான சிறப்புத் தலைப்புகளில் பல்வேறு மருத்துவ அறிஞர்கள் பேசினர். பல்சுவைக் கலைநிகழ்ச்சிகள் வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில் நிகழ்த்தப்பட்டன. நகரின் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வசதி அனைவரது பாராட்டையும் பெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை 'ஆத்மா'வின் தலைவி டாக்டர். தமிழரசி, கரோலினா வட்டத் தலைவி டாக்டர். வளர்மதி சுந்தர் ஆகியோரும் குழுவினரும் செய்திருந்தனர். இந்த மாநாட்டின்போது தமிழகத்திலும் அமெரிக்காவிலும் வாழும் நலிவுற்றோருக்கான மருத்துவச் சேவைக்காக, சுமார் 22,000 டாலர் தொகை மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com