ரசிகா குமாரின் 'தைரியம்'
ஜூலை 17, 2011 அன்று, அபிநயா நாட்டியக் குழுமத்தின் இளைய தலைமுறை நாட்டிய மணியாகவும், நடன அமைப்பாளராகவும் விளங்கும் ரசிகா குமாரின் 'தைரியம்' என்ற தலைப்பிலான நாட்டிய நிகழ்ச்சி சாரடோகா உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. கடவுள் வாழ்த்தில் சாத்விகம் சிவம் என்பதில் நவரசங்கள் அனைத்தும் சிவபெருமான் உடலின் 9 அம்சங்களாக விளங்குவதை தெளிவாக அபிநயித்தது அருமை. அடுத்து வந்த வர்ணத்தில் இறைவனிடம் கொண்ட பிரேமையையும், பக்தியையும் விதவிதமான முக பாவங்களுடன் ஆடியது வெகு சிறப்பு. 'தைரியம்' என்ற தலைப்புக்கேற்றபடி ஒரு காலத்தில் கோவில்களில் ஆடத் தடைசெய்யப்பட்ட 'சதிராட்டம்' என்ற பரதநாட்டியத்தை தைரியத்தினாலும், விடா முயற்சியினாலும் மறுபடியும் தழைத்து வளரச் செய்த ஒரு பெண்மணியாகத் தன் திறமையை ரசிகா வெளிக்காட்டிய விதம் அருமை. ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி சம்பவத்தை புயலின் வேகத்தையும், அலைகளின் சீற்றத்தையும் தன்னுடைய துடிப்பான பாவங்களினால் கண்முன்னே கொண்டு வந்து கலங்க வைத்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்மக்களின் நல்வாழ்வுக்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இறுதியில் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து லக்ஷ்மணனை உயிர்ப்பித்த ஹனுமானின் வீரம், தைரியம், பலத்தை கண்முன் கொண்டு வந்து காட்டினார்.

நிகழ்ச்சிக்கு உறுதுணையாக மாளவிகா குமார் (நட்டுவாங்கம்), ஆஷா ரமேஷ் (குரலிசை), நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியோர் அமைந்திருந்தனர். குருவின் குருவாக சந்திரசேகரனும், அவரது துணைவியார் ஜெயா சந்திரசேகரனும் வந்து இளம் நாட்டிய மணியை வாழ்த்தியது மகுடமாக அமைந்தது.

உஷா பத்மநாபன்,
சாரடோகா, கலிபோர்னியா

© TamilOnline.com