கிளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை
ஏப்ரல் 21, 2011 முதல் 11 நாட்கள் கிளீவ்லாண்ட் தியாராஜ ஆராதனை விழா நடைபெற்றது. இதன் பல்வேறு போட்டிகளில் 446 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். விழாவில் 270 கலைஞர்கள், 70 கச்சேரிகள் செய்துள்ளனர்.

இந்த வருட விழா வழுவூர் ராமையா பிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழா என்பதால் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ராமாயண காவியத்தை ஐந்து காண்டங்களாகப் பிரித்து நாட்டியக் குழுக்கள் மேடையேற்றின. இதற்கு சித்ரவீணை ரவிகிரண், நெய்வேலி சந்தானகோபாலன், பாபநாசம் ருக்மிணி ரமணி, சுகுணா புருஷோத்தமன் ஆகி்யோர் இசையமைக்க பாபநாசம் அசோக் ரமணி, நிஷா ராஜகோபால், காயத்ரி வெங்கட்ராகவன், கே. காயத்ரி, ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் போன்றோர் பாடினர். நாடகத்தை நர்த்தகி நட்ராஜ், சாவித்ரி, ஜெகந்நாத ராவ், வழுவூராரின் மாணவி ராதா, அனிதா குஹா ஆகியோர் வடிவமைத்திருந்தனர். நாட்டிய நாடகத்திற்கு முன்னால் இரண்டு இளம் நடனக் கலைஞர்கள் ராமாயணம் பற்றி உரையாடியது சிறப்பு. நியூயார்க்கின் அதிதி சம்பத், ஆமினி மைனாம்பாலி, ஸஞ்சனா, பிரக்ஞா மதுசூதன், மிச்சிகனின் கிருத்திகா ராஜ்குமார், கிரிஜா ஹரி பிரசாத், கலிபோர்னியாவின் மாயா மூர்த்தி ஆகியோரின் உரைகள் அருமை.

ஏப்ரல் 21 அன்று நடந்த துவக்க விழாவில் ஹிந்து பத்திரிகையின் உரிமையாளரும், சென்னை மியூசிக் அகாடமியின் தலைவருமான என். முரளி கலந்துகொண்டு கலைஞர்களுக்கு சங்கீத ரத்னாகரா, நிருத்ய ரத்னாகரா, ஆசார்ய ரத்னாகரா போன்ற பல பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

பத்து நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது கச்சேரிகள் நடைபெற்றன. ஐந்து நாட்கள் ராமாயண நாட்டிய நாடகம் நடைபெற்றது. தினமும் காலை எட்டு மணிக்கு போட்டியில் முதலிடம் பெற்ற இளம் கலைஞருக்கு கச்சேரி செய்யும் வாய்ப்பு. இங்கு நடக்கும் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு சென்னை மியூசிக் அகாடமியின் டிசம்பர் இசைவிழாவில் கச்சேரி செய்யும் சந்தர்ப்பம் தருவதாகவும் அறிவித்தனர். இந்த வருடம் அந்த வாய்ப்பைப் பெற்றவர் பதினோறே வயதான ஸ்ரீரஞ்சனி.

இந்த விழாவின் சிகரம், டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா, சுதா ரகுநாதன், ரவிகிரண் மூவரும் இணைந்து நடத்திய ஞாயிறு காலைக் கச்சேரிதான். சங்கர் மகாதேவனின் பஜனை நிகழ்ச்சி தேனாய் இனித்தது. தவிர, முன்னணி இசைக்கலைஞர்களான நிஷா ராஜகோபால், மாம்பலம் சகோதரிகள் சுபாஷிணி-நிர்மலா, கர்நாடிகா சகோதர்கள், ஆர்.கே. ஸ்ரீகண்டன், அசோக் ரமணி, மணிமாறன், புல்லாங்குழல் டாக்டர் என்.ரமணி போன்ற ஜாம்பவான்களின் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன.

சுகுணா புருஷோதமன்-சுகுணா வரதாச்சாரி நிகழ்த்திய வழுவூராருக்குச் சமர்ப்பணமான இசை நிகழ்ச்சியில் ராகமாலிகை பல்லவியும், பாலமுரளி அதற்காக விசேஷமாக இயற்றிய கான ஸூதா ரஸா பான என்ற நாட்டை நாக க்ருதியும், தியாகராஜர் மீதான பெஹாக் ராகத் தில்லானாவும் சுவையோ சுவை.

கலிபோர்னியாவின் அனுராதா ஸ்ரீதரின் மாணவர்கள் 30 பேருக்குமேல் இணைந்து அளித்த வயலின் சேர்ந்திசை வெகு சிறப்பு. நியூ ஜெர்சியிலுள்ள அகாடமி ஆஃப் மியூசிக் அமைப்பின் சார்பில் டி.எஸ். நந்தகுமாரும் அவரது சீடர்கள் 34 பேரும் மிருதங்கத்தில் இணைந்து நிகழ்த்திய தாளவாத்யக் கச்சேரி புதுமையாக இருந்தது. டெக்ஸாஸைச் சேர்ந்த வைஷ்ணவி நரசிம்மனின் கச்சேரி கனகச்சிதம். அவருக்கு இணையாக வயலின் வாசித்த டாக்டர் நர்மதாவைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. இதேபோல 11 வயதான ஸ்ரீரஞ்சனி தர்பாவின் (டெக்ஸாஸ்) கச்சேரியும் அருமை. பக்கம் வாசித்த வி.வி.எஸ். முராரி (வயலின்) திருவாரூர் வைத்யநாதன் (மிருதங்கம்) இருவருமே அசத்தினர். வர்ஜீனியாவைச் சேர்ந்த எட்டுவயதுச் சிறுவன் கமலாகிரண் விஞ்சமூரியின் வயலின் கச்சேரி அருமை.

இதில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக ஸ்ரீநாத் பாலா என்பவர் இணையத்தில் இசை விழா நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறார்.

சந்திரிகா ராஜாராம்,
மின்னசோட்டா

© TamilOnline.com