ஜப்பான் சுனாமி நிவாரண இசை நிகழ்ச்சிகள்
மே 1, 2011 அன்று கலிஃபோர்னியாவின் சான் ரமோனில் இருக்கும் மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி மையத்தின் அரங்கில், ஜப்பான் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு, Dr. சரவணபிரியன் அவர்களின் கர்னாடக வயலின் இசை கச்சேரியும், தொடர்ந்து பிரசாத் பண்டார்கர் அவர்களின் இந்துஸ்தானி புல்லாங்குழல் இசையும் நடைபெற்றன.

சரவணபிரியன் வயலின் கச்சேரியில் அவரது குரு லால்குடி ஜெயராமன் அவர்கள் வடிவமைத்த பௌளி ராக வர்ணத்தைத் தொடர்ந்து, 'ஸ்ரீ வாதாபி' என்னும் பாபநாசம் சிவன் இயற்றிய ஸஹானா ராக கிருதியுடன் ஆரம்பமாயிற்று. பின், கோசல ராகத்தில் 'கா வா கந்தா' என்னும் கோடீஸ்வரர் கிருதியும், ஜிஎன்பியின் 'உன்னடியே கதி' (பஹுதாரி) பாடல் ஆலாபனை, கல்பனா ஸ்வரம், மிருதங்க தனி ஆவர்தனம் என்று விஸ்தாரமாக அமைந்தது. தொடர்ந்து வழங்கிய, ராஜாஜியின் 'குறை ஒன்றும் இல்லை' (ராகமாலிகை), 'யமுனா நதி தீரம்' (மதுவந்தி) என்னும் அம்மாவின் பஜனை கேட்டோர் மனதைக் கவர்ந்தது. இறுதியாக கானடா ராகத்தில் லால்குடி அவர்களின் தில்லானாவுடன் முதல் பகுதி இசை நிறைவடைந்தது. ஸ்ரீராம் பிரம்மானந்தம் அவர்கள் இதற்கு மிருந்தங்கம் வாசித்தார்.

இடைவெளியை அடுத்து, பிரசாத் பண்டார்கர், இந்துஸ்தானி புல்லாங்குழலிசை பாணியில், சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்நிகழ்ச்சிக்கெனத் தான் வடிவமைத்த பாடலை ஜப்பான் நகரவாசிகளுக்குச் சமர்ப்பணம் செய்தார். அவருக்கு வாசித்த இளம் விகாஸின் தபேலா அருமை. 'திலக் கமோத்' ராக ஆலாப், கட் என்னும் வட இந்திய பாணியில் குழலிசை, ஜப் தாள அமைப்பில் பிரவாகித்தது. தபேலாவின் தனித்தன்மையை உணர்த்தும் வகையில் அமைந்த தாள வாத்தியம், விகாஸின் திறமையை வெளிப்படுத்தியது. தன் குரு வடிவமைத்த, பதினோரு அங்க தாள அமைப்பில் விகாஸ் வாசித்ததும், அவர் அளித்த விரிவுரையும் கேட்பவர்கள் மனதைக் கவர்ந்தது. பிரசாத் தொடர்த்து ரூபக் தாளத்தில் 'ஜனஸம்மோஹினி' ராகப் பாடலை இசைத்து, பின் பண்டிட் பீம்சேன் ஜோஷியின் மராத்தி பஜனையுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

ஜெயஸ்ரீ நரேஷ்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com