இன்னுமொரு இந்திரா காங்கிரஸ்
காங்கிரசில் சிறிது காலமாக அடங்கி இருந்த கூட்டணி ஆட்சியில் அதிகத் தொகுதி ஒதுக்கீட்டுப் பிரச்சனை மறுபடியும் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மூலம் தலைதூக்கத் தொடங்கியது.

தி.மு.க. தலைமையையும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் வாசனையும் பல்வேறு சமயங்களில் திண்டிவனம் ராமமூர்த்தி விமரிசித்து வந்துள்ளார். வாசன் தமிழக காங்கிரசை தி.மு.கவிடம் அடகு வைத்துவிட்டார், தமிழகத்தில் காங்கிரஸ் அதிகத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும், காங்கிரசில் வன்னியர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்பது போன்றவற்றை மேடைகளில் உரக்க முழங்கத் தொடங்கினார்.

போதாததற்கு, அண்மையில் ஜெயலலிதாவை இவர் போயஸ் கார்டனில் சந்தித்துப் பேசியது காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இச்செயலுக்கு விளக்கம் கேட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையில் மத்திய அமைச்சரவையில் வாசனுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டவுடன், ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கோஷம் காங்கிரசில் உரத்து ஒலிக்கத் தொடங்கியது. இதனையடுத்து காங்கிரஸ் மேலிடம் வாசனைத் தமிழகத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கி, கிருஷ்ணசாமியை அந்த இடத்தில் நியமித்தது. இச்செயல் திண்டிவனம் ராமமூர்த்தி போன்றோரின் 'வன்னியருக்குப் பிரதிநிதித்துவம் இல்லை' என்ற குற்றச்சாட்டை முடக்கியது. தொடர்ந்து திண்டிவனம் ராமமூர்த்தியைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிப் பரபரப்பை ஏற்படுத்தியது காங்கிரஸ் தலைமை.

பதிலடியாக திண்டிவனம் ராமமூர்த்தி 'தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சி'யைத் தொடங்கியுள்ளார். தன்னுடைய புதிய கட்சி காமராஜரின் பாதையில் செல்லும் என்றும் காமராஜர் கடைப்பிடித்த நெறிமுறைகளுக்கு ஏற்ப சுயமரியாதையோடு இயங்கும் என்றும் கூறியுள்ளார். வருகிற தேர்தலை அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் என்றும் கூறியுள்ளார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com