வளைகுடாப் பகுதி தமிழர் விழா
பிப்ரவரி 12, 2011 அன்று பிளசண்டன் ஹார்வஸ்ட் பார்க் மிடில் பள்ளி வளாகத்தில் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தினரால் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முத்தமிழ் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. விழாவுக்கென்றே சிறப்பாக இயற்றப்பட்டிருந்த 'பொங்கும் மங்களம் தழைத்திடவே' பாடல் நிகழ்ச்சியிலும், 'இனிய தமிழ்' பொங்கல் பாடலிலும் பல குழந்தைகள் கலந்து கொண்டு விழாவின் ஆரம்பத்திலேயே களைகட்டச் செய்தார்கள். சிறுமிகளின் வயலின், வீணை இசை அருமை. பரதம், காவடி, கும்மி, குறத்தி ஆட்டம், கிராமிய ஆட்டம், ஒயிலாட்டம், திரை இசை என நிகழ்ச்சிகள் பலவும் சிறப்பாக இருந்தன.

சிறுமியரின் சுப்ரமண்ய கௌத்துவம், சிவசக்தி, ரகுராம் பெருமை பாடல்கள் மற்றும் குழந்தைகளின் காவடி ஆட்டம், ஒத்தக்கல்லு மூக்குத்தி, மணப்பாறை மாடு கட்டி திரைப்பாடல்கள், ஜிங்குசக்கா, கும்மி, தெம்மாங்குப் பாடல்கள் யாவரையும் கவர்ந்தன. ஆண்களின் ஒயிலாட்டம், இருபாலரும் இணைந்து ஆடிய 'பனாரஸ் பட்டு கட்டி' பாடல் நிகழ்ச்சி, பார்வையாளர்களையும் ஆட வைத்தது. 'மண்வாசனை' கவியரங்கத்தில் ஆறு கவிஞர்களின் கருத்தாழமிக்க கவிதைகள் செவிக்கும், சிந்தனைக்கும் விருந்து. கலைப்பகுதிச் செயலர் ஸ்ரீதர் மைனரின் ஒருங்கிணைப்புரை சுவை கூட்டியது. விழா ஏற்பாடுகளை மன்றத்தின் 2011ம் ஆண்டிற்கான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் திறம்படச் செய்திருந்தனர். அவர்களை தலைவர் சரவணன் முருகையா கூட்டத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். மொத்தத்தில் ஒரு சுவையான முத்தமிழ் விருந்து.

வி.சுப்ரமணியன்,
ப்ளெசண்டன், கலிபோர்னியா

© TamilOnline.com