சாதனைப் பாவையர்: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்
கர்நாடக சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் வீணையில் சாதகம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு தந்தி வருகிறது, பெண் குழந்தை பிறந்திருப்பதாக. அவர் வாசித்துக் கொண்டிருந்த ராகம் ஸ்ரீரஞ்சனி. அந்தப் பெண் குழந்தைதான் இன்றைக்கு இளைய தலைமுறை இசைக் கலைஞர்களுள் முன்னணியில் இருக்கும் ஸ்ரீரஞ்சனி. தந்தையே குருவாக அமைய. இரண்டு வயதிலேயே பாலபாடம் ஆரம்பித்து விட்டது. ஒரு விழாவில் 'பால கோபால...' என்று பாட அதுவே முதல் மேடைக் கச்சேரி. அடுத்து ஆனந்த விகடனில் மழலை மேதையாக அறிமுகமானது பரவலான கவனத்தைத் தந்தது. முதல் கச்சேரி பதினாறாம் வயதில். அதுமுதல் எண்ணற்ற கச்சேரிகள், ஏகப்பட்ட விருதுகள். சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் பாரத் கலாசார் ஸ்பெஷல் ஸ்காலர்ஷிப்பைத் தொடர்ந்து பதினைந்து வருடங்கள் வாங்கிய பெருமை ஸ்ரீரஞ்சனிக்கு உண்டு.

சென்னையின் பிரபல சபாக்களில் மட்டுமல்லாது மும்பை, பெங்களூரு, மங்களூர், டெல்லி, திருவனந்தபுரம், திருச்சி, மதுரை எனப் பல இடங்களிலும் இவரது குரலிசை ஒலித்ததுண்டு. அமெரிக்கா மற்றும் துபாயில் தந்தையுடன் இணைந்து கச்சேரிகள் செய்திருக்கிறார்.

ஸ்ரீரஞ்சனிக்கு நாட்டியம், ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் உண்டு. அற்புதமாகத் தஞ்சாவூர் பாணி ஓவியங்களை வரைவார். ஓவியத் திறமைக்காகவும் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கிறார். ரஞ்சனியின் தாய் மீரா நல்ல இசை ஞானம் உள்ளவர். அத்தையும் நன்றாக வீணை வாசிப்பார். திருப்புகழ் முழுதும் அறிந்தவர். தந்தையும் திருப்புகழை நன்கு அறிந்தவர் என்பதால் ஸ்ரீரஞ்சனியும் திருப்புகழ்ப் பாடல்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். வரும் ஏப்ரல் 14 முதல் தந்தையுடன் இணைந்து அமெரிக்காவில் கச்சேரி செய்ய இருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com