மொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்ற புவனா நடராஜன்
வங்க மொழியில் ஆஷாபூர்ண தேவி எழுதிய நாவலை 'முதல் சபதம்' என்ற பெயரில் மொழிபெயர்த்த திருமதி புவனா நடராஜன் சென்ற ஆண்டில் அதற்காகச் சாகித்திய அகாதமியின் விருது பெற்றார். இது உட்பட 20 நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தாராசங்கர் பந்தோபாத்யாயாவின் ஞானபீடப் பரிசு பெற்ற நாவலான 'ஞானதேவதா' தவிர, சுனில் கங்கோபாத்யாய, தஸ்லீமா நஸ்ரின், சந்தோஷ் குமார் கோஷ், மஹாஸ்வேதா தேவி, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய ஆகியோர் நூல்களின் மொழிபெயர்ப்புகளும் இவரது பணியில் அடங்கும். சொந்தச் சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.

நல்லி திசையெட்டும் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது ஆகியவற்றையும் இவர் மொழிபெயர்ப்பு நூல்களுக்காகப் பெற்றுள்ளார். புவனா நடராஜனுக்குத் தாய்மொழி தமிழ். அதைத் தவிர வங்காளி, ஹிந்தி, ஆங்கிலம் தெரியும். ஓரளவு சமஸ்கிருதமும். இவரது கதைகள் மங்கையர் மலர், சாவி, கல்கி, சுமங்கலி, ஞானபூமி, இதயம் பேசுகிறது, கோகுலம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.



© TamilOnline.com