கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்)
தமிழ்மூதறிஞர் கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) டிசம்பர் 21, 2010 அன்று மிஸசாகாவில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு செட்டிபாளயத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவாமி விபுலாநந்தரின் நேரடி மாணவரான புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளையிடமும், பிற தமிழறிஞர்களிடமும் கல்வி பயின்றவர். தமிழ் ஆசிரியராக இலங்கையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். 35 வருடங்களாகக் கனடாவில் வசித்து வந்த இவர் கனடாவின் தமிழ் கலை, கலாசாரம், இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க முன்னோடியாவார். கனடாவில் முதன்முதலாக அச்சியந்திர சாலை நிறுவி தமிழ்ப் பதிப்புக்களை மேற்கொண்டதுடன் 'நிழல்' என்னும் வாரமலரையும் வெளியிட்டார். தமிழ் எழுத்துருக்களைக் கணினியில் வடிவமைப்பதிலும் இலவசமாக மாணவர்களுக்குத் தமிழ் கற்பிப்பதிலும் தன் மனைவி திருமதி. பசுபதி செல்வராச கோபாலுடன் இணைந்து பணியாற்றினார்.

கனடாவில் உலகத் தமிழர் பண்பாட்டுக்கழகம், சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம், கிழக்கு மக்கள் அபிவிருத்திச் சங்கம் என்பன அவரது முயற்சியால் உருவானவை. உலகத்தமிழ் பண்பாட்டுக்கழகத்தின் தாய்ச்சங்க உபதலைவராகவும் அதன் போதகராகவும் பலகாலம் கடமையாற்றினார்.

இவரது தமிழ்ச் சேவை இலங்கை, தமிழ் நாடு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அறிஞர்களாலும், பல்கலைக் கழகங்களாலும் பாராட்டப்பட்டது. தமிழ் மொழி, இலக்கியத்துக்கான இவரது சேவையைப் பாராட்டி கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதி பட்டம் வழங்கியது.

பூராடனார் தமிழ், சிங்களம், ஆங்கிலம் தவிர கிரேக்கமும் அறிந்தவர். சுமார் 500 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவர், இறக்கும் வரையில்-தனது 83வது வயதிலும் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது மறைவு உலகத் தமிழருக்கு ஒரு பேரிழப்பாகும்.

அஜந்தா ஞானமுத்து,
சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம், கனடா

© TamilOnline.com