'பெப்பெரப்பே' வழங்கிய 'மாங்கல்யம் வம்பு தானேனா'
அக்டோபர் 30 அன்று சிகாகோவின் பெப்பெரப்பே நாடகக்குழு தனது நான்காவது படைப்பான 'மாங்கல்யம் வம்பு தானேனா' நாடகத்தை அரோரா நகரின் மீட்டியாவேலி உயர்நிலைப் பள்ளிக் கலையரங்கத்தில் அரங்கேற்றியது.

சுமார் நானூறு ரசிகர்கள் கண்டு களித்த இந்த நாடகம் சிரிப்பலைகளையும் சிந்தனையையும் தூண்டுவதாக அமைந்திருந்தது. நாடகத்தின் கதையமைப்பும், கதையோடு ஒன்றிய நகைச்சுவைக் காட்சிகளும், வசனங்களும் நடிகர்களின் இயல்பான நடிப்பும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டு கிராமத்தில் ஏழ்மையில் வாடும் ஒரு பண்டிதரின் குடும்பம், அமெரிக்கா சென்று வளமாக வாழும் வாய்ப்பைப் பெறும்போது, அக்குடும்பத்தில் எழும்பும் குழப்பங்களையும், உறவுகளுக்குள்ளே ஏற்படும் உரசல்களையும், போட்டி, போராட்டங்களையும் நகைச்சுவையோடு சித்திரித்தது இந்த நாடகம்.

அழகான மேடை செட், நேர்த்தியான ஒலி, ஒளி அமைப்பு, ஒப்பனை, காஸ்ட்யூம், 'பளிச்' காட்சிகள் என அனைத்துத் தரப்பிலுமே குழுவினரின் கடின உழைப்பு வெளிப்பட்டது. அதிலும் குறிப்பாக மாப்பிள்ளை அழைப்புக் காட்சியில் அலங்கரித்த வாகனம் மேடைமேல் பவனிவர, அதன் பின்னே ஒரு குழு சீர்வரிசைகளுடன் அணிவகுத்துச் சென்றது அருமை.

மாப்பிள்ளை கணேஷாக அரவிந்த், விக்டோரியாவாக தீபா, ருக்குவாக லக்ஷ்மி, சுப்புணியாக ம்ணி, கமலாவாக நிவேதா, கந்தசாமியாக ராஜ், சாம்புவாக ரங்கா, மேனகாவாக ரஞ்சனி, க்ரிஸ்ஸாக ரவிகுமார், அத்தைப் பாட்டியாக சேகர், சிஷ்யனாக சுதர்ஷன், சாமியாராக ஸ்ரீராம், அமலாவாக வசுமதி, அம்புஜமாக வித்யா என அனைவருமே பாத்திரங்களைச் சிறப்பாக நடித்திருந்தனர். மாலதி-நிவேதா இசையிலும், ரவிகுமார்-ஸ்ரீராமின் அரங்க மேற்பார்வையிலும், ராஜ்மணியின் நிதி நிர்வாகம், மேலாண்மையிலும் உருப்பெற்ற இந்த நாடகத்தை ரங்கா கதை, வசனம் எழுதி, சேகருடன் இணைந்து இயக்கியிருந்தார்.

வார இறுதி நாட்களில் பயிற்சி பெற்று, வசன உச்சரிப்பு, உடல்மொழி, பாவங்கள் என நடிப்பின் பல படிவங்களை இவர்கள் காட்டி அசத்தினர். சிகாகோ அகாடமி ஆப் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பின் நாடகப் பிரிவான பெப்பரப்பே இதுவரை நான்கு நாடகங்களை அமெரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் மேடையேற்றியுள்ளது. விவரங்களுக்கு: www.peppae.com மற்றும் www.caifausa.org

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com