காந்தியும் ஐன்ஸ்டைனும்


அக்டோபர் 27, 1931 அன்று உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மஹாத்மா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தார்:

மதிப்புகுரிய திரு. காந்தி,

உங்கள் நண்பர் என் வீட்டுக்கு வந்திருப்பதை, இந்த வரிகளை அனுப்ப நான் பயன்படுத்திக் கொள்கிறேன். வன்முறையைத் தவிர்க்காதவர்களிடம் கூட வன்முறையே இல்லாமல் வெற்றிபெற முடியும் என்று உங்கள் பணிகளால் நிரூபித்துவிட்டீர்கள். உங்கள் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உங்கள் முன்னுதாரணம் பரவும், எல்லோரும் மதிக்கும் ஒரு பன்னாட்டு ஆணையகம் உருவாகி, அதன்மூலம் எடுக்கப்படும் முடிவுகள் போர்களைத் தவிர்க்கும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

தங்களது
ஆ. ஐன்ஸ்டைன்

ஒருநாள் உங்களை நேருக்கு நேர் சந்திக்கலாம் என்று நம்புகிறேன்


அதற்கு காந்தி இவ்வாறு பதில் எழுதினார்:

அன்புள்ள நண்பரே,

சுந்தரம் அவர்கள் வழியாக நீங்கள் அனுப்பிய அழகிய கடிதத்தைப் பெற்று மகிழ்ந்தேன். எனது பணி உங்கள் பார்வையில் நன்மதிப்பைப் பெறுவது எனக்குப் பெரும் ஆறுதலாக உள்ளது. நாம் நேருக்கு நேர், அதுவும் இந்தியாவில் என் ஆசிரமத்தில், சந்திக்க விழைகிறேன்.

நட்புடன்
எம்.கே. காந்தி


***


நமது காலத்தின் அரசியல் மனிதர்களில் காந்தியின் கருத்துக்களே மிகுந்த ஞானம் நிரம்பியவை என்று நான் நம்புகிறேன்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

***


காந்தியின் வழியில் நாமும் செயல்பட முயற்சிக்க வேண்டும். நமது லட்சியங்களுக்காக வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது, மாறாக தீயது என்று நாம் கருதுவதில் நாம் பங்குபெறாமல் இருக்க வேண்டும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

***


காந்தியைப்பற்றி பாரதி

வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!

மகாகவி பாரதி

***


காந்தியைப்பற்றி பாரதி

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ?
என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!

மகாகவி பாரதி

***


காந்தியைப்பற்றி பாரதிதாசன்

இன்னல் செய்தார்க்கும் இடர்செய்திடாமல்
இராட்டினம் சுற்றென்று சொல்லும் - எங்கள்
ஏதமில்காந்தியடிகள் அறச்செயல்
வெல்லும்-வெல்லும்-வெல்லும்

கன்னலடா எங்கள் காந்தியடிகள் சொல்
கழற்றுகின்றேன் அதைக் கேளே - நீவிர்
கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத்
தூளே-தூளே-தூளே

'ராட்டைப் பாட்டு', புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

***


காந்தியைப்பற்றி பாரதிதாசன்

தோய்மது வாய்க்காதில்வந்து
வீழ்ந்ததொரு வாக்கு - வந்து
வீழ்ந்ததொரு வாக்கு - அது
தொல்லைகெட வந்துதித்த
காந்தி அண்ணல் வாக்கு

கதரணிவீர் என்றுரைத்த
காந்தியண்ணல் ஆணை - எழிற்
காந்தியண்ணல் ஆணை - அதைக்
கருதிடுவீர் அது உமக்கு
நாரதனார் வீணை

'தேசத்தாரின் பிரதான வேலை', புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

***

© TamilOnline.com