ஒப்பில்லாத சுப்பு
கொத்தமங் கலத்துச் சுப்பு - தமிழ்
கொஞ்சும் அவர்பாட்டுக் கீடுண்டோ செப்பு! (கொத்தமங்கலத்து)

எத்தனை எத்தனை பாட்டு - அவை
எல்லாமே பாலோடு தேன்சேர்ந்த கூட்டு
குத்தால வெள்ளம்போல் ஓட்டம் - அதில்
குளித்துக் களிக்கும்நம் நெஞ்சில்கொண் டாட்டம்

ஏரு பிடிப்பவன் வீட்டில் - உள்ள
இன்பமும் துன்பமும் காட்டஓர் பாட்டு
போருக்குச் சென்றவர் நாட்டைக் - காக்கப்
போனபின் வீடு திரும்பஓர் பாட்டு

காந்தி மகான் வில்லுப் பாட்டு - தேசக்
காதலை மாந்தர் மனத்தினில் ஊட்டும்
சாந்தி உலகினில் நாட்ட - நல்ல
சங்கதி சொல்லி வழியையும் காட்டும்

பாட்டியும் பாட்டனும் கூட - அவர்
பாட்டுச் சுவைதூண்டும் எழுந்துநின் றாட
நாட்டு நடப்பினைப் பேசும் - பாட்டில்
நாட்டுப் புறவாசம் நன்றாக வீசும்

சீவாளிச் சத்தத்தில் நாட்டம் - என்று
தில்லானா மோகனாம் பாள்கதை காட்டும்
சாவா இலக்கியக் கூடம் - அவர்
சாதனை யாவும் சரித்திரப் பாடம்

ஆறடி மேனிக் கவிஞர் - கலை
யாவிலும் தேர்ந்து சிறந்த அறிஞர்
நீறு துலங்கிடும் நெற்றி - அது
நித்தம் தரும்தொழில் யாவிலும் வெற்றி

நெஞ்சத்தில் வேலனின் பக்தி - வாழ்வில்
நேர்மை தவறாமை அவரது சக்தி
அஞ்சலி செய்திட வாரும் - நூ(று)
ஆண்டு நிறைவில் அவர்புகழ் கூறும்.

*****


(கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இக்கவிதை வெளியிடப்படுகிறது. அவரது விரிவான வாழ்க்கைக் குறிப்பை 'முன்னோடி' பகுதியில் பார்க்கலாம்)

கவிஞர் அனந்த்,
கனடா

© TamilOnline.com