வளம் தரும் வரலக்ஷ்மி
ஸ்ரீ வரலக்ஷ்மியை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக ஆவணிமாதம் கருதப்படுகிறது. ஆவணிமாதம் பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மகாலக்ஷ்மி எட்டுவிதத் தோற்றங்களில் அஷ்டலக்ஷ்மியாக அருள் புரிகிறாள். இழந்த செல்வங்களை மீண்டும் அடைய தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து மகாலக்ஷ்மி தோன்றினாள். தன்னைத் தொழுபவர்களுக்கு, வேண்டியவாறு அருள்புரியும் மகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை மணந்து அவர் மார்பை அலங்கரித்தாள். மகாலக்ஷ்மியை பூஜித்துப் போற்றுபவர்களுக்கு அருள்புரிவதில் மகாலக்ஷ்மி நிகரற்றவள். அதிலும் வரலக்ஷ்மியாக அவளை விரதம் இருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



இந்த விரதத்தைக் கடைப்பிடித்து பூஜை செய்து கையில் நோன்புக் கயிறு கட்டிக் கொள்பவர்களுக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். மணமாகாத பெண்களுக்கு மணமாகும். வளமான வாழ்வு கிட்டும். சுமங்கலிகள் வாழ்வாங்கு வாழ்வர்.

இழந்த பொருளைத் திரும்பப் பெறுவதற்கு இந்த விரதம் துணை புரிகிறது. விக்கிரமாதித்தன் நந்தன் என்னும் மன்னனிடம் இழந்த நாட்டை மீண்டும் பெற, இந்த விரதத்தை அனுசரித்தே பெற்றான். பார்வதி தேவியிடம் சாபம் பெற்ற சித்ரநேமி என்பவள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து இழந்த தன் உடல் அழகை மீண்டும் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது.

இந்த விரதத்தைப் பரம்பரையாக அனுஷ்டிக்கும் வழக்கம் உடையவர்கள், ஆண்டுதோறும் தவறாமல் செய்வர். புதிதாகத் திருமணம் ஆன பெண்களுக்கு குடும்பத்தில் பெரியவர்கள் திருமணம் ஆன வருடம் இந்த பூஜையை ஆரம்பித்து வைப்பார்கள். இவ்விதம் மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள், வீட்டில் சென்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் வரலக்ஷ்மியின் வரம் கிட்டும். இந்த விரதத்தைச் செய்ய விரும்பும் பெண்கள், பெரியவர்களின் அனுமதி பெற்று விரதம் ஆரம்பித்துப் பூஜை செய்யலாம் என்று கூறப்படுகிறது.

பூஜை முறை
##Caption## முதலில் வரலக்ஷ்மி அம்மனை நம் வீட்டிற்கு அழைக்க வேண்டும். நம் சக்திக்கேற்றபடி வீட்டின் முன்பக்கத்து ரேழியிலும், பூஜை அறையிலும் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். அம்மன் உட்கார மண்டபம் அமைத்து அதன் நடுவில் அட்சதை, அதன்மேல் நுனி இலையில் நெல்லைப் பரப்பி அதன்மேல் தாம்பாளத்தில் அட்சதையைப் போட்டு நடுவில் கலசம் (சக்திக்கேற்றபடி வெள்ளி, தங்கம், செம்பால் ஆனது) வைக்க வேண்டும். கலசத்தின் உள்ளே அரிசி, எலுமிச்சம்பழம், நாணயங்கள் போட்டு மேலே மஞ்சள் தடவிய தேங்காயை மாவிலை அல்லது வெற்றிலையைச் சுற்றி வைத்து அம்மனின் முகத்தை மாட்டிப் பொருத்தி அலங்காரம் செய்ய வேண்டும். அம்மன் முகத்தின் இருபக்கமும் காதோலை, கருகமணி வைத்து புதுப்பாவாடை அல்லது ரவிக்கைத் துணி உடுத்த வேண்டும். முதல் நாள், வியாழன் மாலை அம்மனை அலங்காரம் செய்து, தூபதீபம் காட்டி, விளக்கேற்றிப் பொங்கல் நிவேதனம் செய்வதுண்டு.

வெள்ளியன்று காலை அம்மனை வைத்து அலங்கரித்த கலசத்தை தாம்பாளத்துடன் ரேழியில் கோலமிட்ட இடத்தில் வைத்து தூப, தீபம் காட்டி பழம் நிவேதனம் செய்து ஆரத்தி எடுத்து அம்மனை வரவேற்கும் பாடல்களைப் பாடி உள்ளே அழைத்து வந்து, தயாராக வைத்துள்ள மண்டபத்தில் நுனி இலையின் மேல் தாம்பாளத்தை வைத்து அம்மனை அமர்த்த வேண்டும். கையில் கட்டிக் கொள்ளும் நோன்புச் சரடுகளை வரலக்ஷ்மி அம்மன் பாதத்தில் வைத்துப் பூஜிக்க வேண்டும்.

முறைப்படி சங்கல்பம் செய்து விநாயகர், லக்ஷ்மி பூஜை செய்து, பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். வடை, சுண்டல், பாயசம், இட்லி, கொழுக்கட்டை, பழங்கள் என்று சக்திக்கேற்றவாறு நிவேதனம் செய்து பின் நோன்புச் சரடை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். அன்று மாலை அல்லது மறுநாள் மாலை விளக்கேற்றி, சுமங்கலிகளுக்கு சந்தனம், தாம்பூலம் கொடுத்து, பின் மறுநாள் காலை புனர்பூஜை செய்து யதாஸ்தானம் செய்து, இரவு அம்மனை அரிசிப்பானையில் வைத்துவிட்டு மறுநாள் உள்ளே எடுத்து வைப்பது வழக்கம்.

பூஜை செய்யும் முறையை விவரிக்கும் புத்தகம், காஸெட், சிடி யாவும் கடைகளில் கிடைக்கின்றன. புரோகிதரை வைத்தும் பூஜை செய்யலாம். இம்முறை ஆகஸ்ட் 20ம்தேதி வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப்படுகிறது.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com