தெரியுமா?: அனாமிகா வீரமணி
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் 2010த்திற்கான ஆங்கில ஸ்பெல்லிங் தேனீ போட்டி ஜூன் 4ஆம் தேதியன்று வாஷிங்டன் டி.ஸி.யில் நடைபெற்றது.

ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த அனாமிகா வீரமணி முதல் பரிசை வென்றிருக்கிறார். 2008ல் சமீர் மிஸ்ரா, 2009ல் காவ்யா சிவசங்கர், இந்த ஆண்டு அனாமிகா வீரமணி எனத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதுவரை வென்றவர்களில் அனாமிகா 8வது இந்தியர் ஆவார். இறுதிச் சுற்றை எட்டியிருந்தனர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தனு ஸ்ரீவத்ஸா மற்றும் அனாமிகா.

அனாமிகாவிடம் கேட்கப்பட்ட இறுதிச் சுற்றின் கடைசி வார்த்தை stromuhr (An instrument for measuring the quantity of blood that flows per unit of time through a blood vessel). சற்றும் பதட்டமில்லாமல் அமைதியாய் மீண்டும் மீண்டும் நடுவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு, தனக்குள் வார்த்தையை உச்சரித்து, தன் அடையாள அட்டையில் எழுத்துக்களை விரலால் எழுதிப் பார்த்து ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தார் அனாமிகா. அவர் வெற்றி பெற்ற தருணம் நம் ஒவ்வொருவருக்கும் நம்வீட்டுக் குழந்தை வெற்றி பெற்றது போன்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் தந்தது. வாழ்த்துக்கள் அனாமிகா!

நித்யவதி சுந்தரேஷ்

© TamilOnline.com