லா ஹோயாவில் இந்திய இசை, நடன விழா
2010 மார்ச் 25 முதல் 28 வரை சான் டியேகோ இந்திய நுண்கலை அகாடமி (IFAA) தனது மூன்றாவது வருடாந்திர இசை, நடன விழாவை யூத சமுதாயக் கூடத்தில் கொண்டாடியது. இது ஜி.என்.பி. நூற்றாண்டு நினைவு விழாவாகவும் கொண்டாடப்பட்டது. விழாவில் நடைபெற்ற 11 கச்சேரிகளுக்குச் சற்றேறக்குறைய 4500 ரசிகர்களும், ஆர்வலர்களும், மாணாக்கர்களும் வந்திருந்து கலையின்பம் துய்த்தனர். இந்த 4 நாட்களை சான் டியேகோ நகர கவுன்சில் உறுப்பினர் ஷெரி லைட்னர் '2010ன் இந்திய இசை, நாட்டிய நாட்கள்' என்று அறிவித்திருந்தார் என்பதே இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

இந்த மஹாநிகழ்வில் மாண்டலின் ஸ்ரீனிவாஸ், மாண்டலின் ராஜேஷ், திருச்சூர் ராமச்சந்திரன் (ஜி.என்.பி.யின் பிரதம சிஷ்யர்), டாக்டர் பந்துல ராமா, இஞ்சிக்குடி, சித்ரா சுப்ரமணியன், காயத்ரி வெங்கடராகவன், மானஸி பிரசாத் மற்றும் பல கலைஞர்கள் பங்கேற்றனர். கர்நாடகம், ஹிந்துஸ்தானி, குரலிசை, வாத்திய இசை பரதநாட்டியம், ஒடிஸி, என்று பல்வேறு வகை இந்தியப் பாணி இசை, நடனங்கள் இங்கே கேட்கவும் காணவும் கிடைத்தன. இந்த விழாவைச் சிறப்பாகச் செய்வதற்காக IFAA குழுவினர் கிளீவ்லாந்து ஆராதனைக் குழுவினருடன் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத் தக்கது.

வட அமெரிக்கக் கலைஞர்களும் இந்தியக் கலைஞர்களும் பங்கேற்ற இந்த விழாவின் மற்றொரு சிறப்பு அம்சம் மைசூர் சிற்றுண்டி, மலபார் சாப்பாடு என்று அளிக்கப்பட்ட வகைவகையான இந்திய உணவுகளும்தான்.

ஹர்ஷா-பவித்ரா விஸ்வநாதன்,
சான் டியேகோ.

© TamilOnline.com