'முடிவல்ல ஆரம்பம்' நாடகம்
ஏப்ரல் 17, 2010 அன்று டிஆன்ஸா கல்லூரி காண்கலைகள் மையத்தில் அவதார்ஸ் நாடகக் குழுவினர் வழங்கிய 'முடிவல்ல ஆரம்பம்' நாடகம் மேடையேறியது.

அரசியல் வாழ்வின் பின்னணியில் முதலமைச்சரான இளவேந்தன் எவ்விதம் வாழ்கிறார், எப்படிப் பதவி வெறியுடன் பெண்களிடையே தவறாக வாலாட்டுகிறார், கடைசியில் அவன் முடிவு என்னவாகிறது என்பதுதான் கதை. அரசியல்வாதிகளின் பண வெறி, பதவி வெறி, பெண் வெறி, கட்சிகளிடையே போட்டி, கட்சித் தொண்டர்களிடையே மோதல், பதவிக்காக தந்தையைக் கொல்வது, அநியாய அராஜகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இரட்டை வாழ்க்கை வாழ்வது என அரசியல் அவலத்தில் சிக்கி உள்ளதை நகைச்சுவை கலந்து நாடகமாகப் புனைந்திருக்கிறார் ஆசிரியர்.

டிவியில் 300 தொகுதிகளில் ஜெயித்த வெற்றிவிழாச் செய்தி அறிவிப்புடன் முதல்வரான இளவேந்தனின் அதிரடி சாதனைகளைப் பற்றிக் கேட்ட வண்ணம் நடிகர்கள் யாவரும் மேடைக்கு வருவது கலக்கல் தொடக்கம். 100வது நாள் வெற்றிவிழா மேடையில் அரசியல் வரலாற்றின் திட்டங்கள் சொல்வதற்குள் கை தட்டாதே, படமே 100 நாள் ஓடலை, அரசு 100 நாள் ஓடுது, மரம் வளர்க்காதே மூளையை வளர் என மதுரை மாவட்டச் செயலாளர் தரும் பதில்கள் ரசிக்கத் தக்கன.

உலகத் தமிழர்களிடையே சீரியல்களால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியின் அன்றாடச் சம்பாஷணை மூலம் வெளிப்படுத்தி உள்ளார் ஆசிரியர். நிறைவாக துர்கா இளவேந்தனுடன் பழகி, உனக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது எனச் சொல்கிறாள். இளவேந்தன் அதைக்கேட்டு அதிர்ந்து, கூட இருந்து குழிபறிக்கிறாயே, ஜூவியில் அடிக்கடி அமெரிக்கா செல்கிறாரே எனக் கேட்டால் என்ன செய்வது என அலறுகிறான். துர்கா உடனே நாட்டை உன்னிடமிருந்து காப்பாற்றப் போகிறேன், உன் கஷ்டங்களுக்கு இது "முடிவல்ல ஆரம்பம்" என சொல்வதுடன் நாடகம் நிறைவடைகிறது.

இதன் மூலம் அநியாயத்திற்கு நிச்சயம் அழிவு உண்டு என்ற செய்தியைப் பதிவு செய்திருக்கிறார் நாடகாசிரியர். இதில் பங்குபெற்ற நடிகர்கள் அனைவரும் திறம்பட நடித்துள்ளனர். கதை கால ஓட்டத்தோடு நகராமல், முன்னும் பின்னுமாகச் செல்லும்படி காட்சிகளை அமைத்திருந்ததும் புதுமை.

© TamilOnline.com