சி.கே. பிரஹலாத்
உலக அளவில் மேலாண்மைச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்றவரும், செயல் உத்தி மேலாண்மைத் (strategic managment) துறையின் குரு என்று போற்றப்பட்டவருமான கோயம்புத்தூர் கிருஷ்ணராவ் பிரஹலாத் ஏப்ரல் 16, 2010 அன்று சான் டியேகோவில் காலமானார். 68 வயதான பிரஹலாத், தமிழகத்தின் கோயம்பத்தூரில் பிறந்தவர். லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்தார். சிறிதுகாலம் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் நிர்வாகப் பணியாற்றினார். பிறகு அஹமதாபாதில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் நிர்வாகவியல் படித்தார். தொடர்ந்து பாஸ்டனிலுள்ள ஹார்வார்ட் பிஸினஸ் ஸ்கூலில் டி.பி.ஏ. (Doctor of Business Administration) பட்டம் பெற்றார்.

பின்னர் இந்தியா திரும்பியவர், அஹமதாபாத் ஐ.ஐ.எம்.மில் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறந்த பல மாணவர்களை உருவாக்கிய பிரஹலாத், மிச்சிகனில் உள்ள ரோஸ் ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் நிர்வாகவியல் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

மனைவி காயத்ரி, மகன் முரளி, மகள் தீபாவுடன் சான் டியேகோவில் வாழ்ந்து வந்த பிரஹலாத், நிர்வாகவியல் குறித்த நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு 'தி டைம்ஸ்' இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த 50 வணிகச் சிந்தனையாளர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. பாரத அரசு இவருக்குப் 'பத்ம பூஷண்' அளித்து கௌரவித்தது.

இவர் அறிமுகப்படுத்திய 'பாட்டம் ஆஃப் த பிரமிட்' என்ற நிர்வாகவியல் சிந்தனைதான் இந்தியாவின் இன்றைய தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். இந்தியாவில் பேருந்துகள் கூடப் போகாத இடத்திற்குச் செல்பேசி நிறுவனங்களும், தொலைக்காட்சிச் சேவையும் செல்ல முடிந்ததென்றால் மிக முக்கியக் காரணம் பிரஹலாதின் புதிய சிந்தனையே. உலகளாவிய மரியாதை பெற்ற தமிழருக்குத் தென்றலின் அஞ்சலி.

© TamilOnline.com