சுஹிர் பொன்னுசாமியின் 'பக்திப் பாமாலை' குறுந்தகடு
ரஷ் (நியூயார்க்) ஸ்ரீராஜராஜேஸ்வரி மீது கொண்ட பக்தியினால் நெகுந்தீவு பொன் சுஹிர் தமிழ் வண்ணப் பாமாலை ஒன்றைக் குறுந்தகடாக வெளியிட்டுள்ளார். கர்நாடக சங்கீதத்தின் இளந்தலைமுறைக் கலைஞர்களுள் ஒருவரான சூரிய பிரகாஷ் இந்தக் கிருதிகளைப் பாடியுள்ளார். இதில் முக்கியமான அம்சம் இந்தப் பாடல்கள் அம்பாளின் ஆலயத்தில் நடைபெறும் நித்ய பூஜா விதிகள் மற்றும் பூஜைக் கிரமங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதுதான்.

சூரிய பிரகாஷின் வெண்கலக் குரலும், அற்புதமான ஸ்வர சஞ்சாரங்களும் மெய்மறக்கச் செய்கின்றன. ஆபோகி ராகத்தில் அமைந்த விநாயகப் பெருமான் மீதான முதல் கிருதி பக்திபாவத்தைப் பொங்க வைக்கிறது. தியாகராஜ ஸ்வாமிகளால் பிரசித்தி பெற்ற இந்த ராகம், நீண்ட ஆலாபனைக்கு வாய்ப்பில்லாத ஔடவ உபாங்க ராகம். இதை தனக்கே உரித்தான கம்பீரமான சாரீரத்தில் அற்புதமாக இசைத்திருக்கிறார் பிரகாஷ். தத்தாத்ரேயர் மீதான கிருதி ஸாரங்கா ராகத்தில் அமைந்து கேட்போரை மெய்மறக்கச் செய்கிறது. அடுத்து வரும் மகாமேரு பூஜையின் மகத்துவத்தைச் சொல்லும் பாடல், த்விஜாவந்தி ராகத்தில் அமைந்து சிறப்புறுகிறது. 'ஸ்ரீ ரஷ்ஷேந்திர அம்பிகே' என்னும் காம்போஜிப் பாடல், ராகம், தானம், பல்லவி மூன்றும் சேர்த்து அமைக்கப்பட்ட கிருதி. இந்தப் பாடலின் ராக ஆலாபனையும், நிரவல், கல்பனா ஸ்வர சஞ்சாரங்களும் வெகு அருமை.

'ருத்ராக்ஷ அபிஷேகம்' (ரேவதி), 'இன்னிசை நாயகியே', 'தமிழம்பாள் மகனே' (காபி), 'கதிரவன் கூடிய' (ராகமாலிகை) ஆகியவை சிறப்பாக உள்ளன. இறுதியில் 'மங்களம்' ஸ்ரீராகத்தில் அமைந்திருப்பது வெகு சிறப்பு.

சுரேஷ்பாபு (வயலின்), கும்பகோணம் சரவணன் (மிருதங்கம்), ஏ.எஸ்.கிருஷ்ணன் (மோர்ஸிங்) ஆகியோரின் பக்க வாசிப்பு பாடல்களுக்கு மெருகூட்டியுள்ளன.

டாக்டர் சோமாஸ்கந்தா,
நியூயார்க்

© TamilOnline.com