தெரியுமா?: ஒலி நூலாக 'சிவகாமியின் சபதம்'
கல்கி அவர்கள் எழுதிய 'சிவகாமியின் சபதம்' வரலாற்றுப் புதினத்தை ரசிக்காதவர் உண்டோ! அதைப் படித்து, ரசித்து, இன்னமும் காதில் ஆயனச் சிற்பியின் உளி ஓசையையும் சிவகாமியின் சிலம்போசையையும் கேட்பவர்கள் உள்ளனர். அமெரிக்காவில் வேலை பார்க்கும் அல்லது பிறந்து வளரும் தமது வாரிசுகள் இந்த அற்புத காவியத்தைப் படிக்கவில்லையே என்ற ஆதங்கம் அவர்களிடம் நிச்சயம் இருக்கும். அதைப் போக்க வந்துள்ளது 'சிவகாமியின் சபதம்' ஒலி நூலாக.


ஒலி வடிவத்தில் கேட்க



நாடக மேடைகளில் புகழ்பெற்ற பாம்பே கண்ணன் மற்றும் ஸ்வாதி சாஃப்ட் சொல்யுஷன்ஸ் கூட்டு முயற்சியில் 30 மணி நேரம் கேட்கத்தக்க 4 அடர்தகடுகளாக (CD) உருவாகி உள்ளது. முப்பதுக்கு மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி மற்றும் மேடை நடிக நடிகையர் இதில் பல்வேறு பாத்திரங்களுக்குத் தம் குரலால் உயிரூட்டி உள்ளனர். அதுவும் தவிர, மூன்று முத்தான பாடல்களும் உண்டு. சம்பவச்சூழலை மனக்கண்முன் கொண்டுவருவதற்கு, போர், வெள்ளம் போன்றவற்றின் ஒலிப்பின்னணி விசேடமாக அமைக்கப்பட்டுள்ளது.

ரேடியோ நாடகம் போல் அல்லாமல், இதில் நாவலின் சம்பவ விவரணப் பகுதிகளும் உள்ளன. அதாவது நாவல் முழுவதுமே சிறப்பாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

மகேந்திர பல்லவரையும் நாகநந்தி அடிகளையும் உங்களையும் உங்கள் இல்லத்தாரையும் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதியுங்கள். அல்லது, காரில் உங்களுக்குத் துணையாக அவர்கள் வருவார்கள்.

இதை இணையம் வழி வாங்குவதற்கு: kalakendra.com

© TamilOnline.com