சீதாநவமி
ஸ்ரீராமநவமி விழா ஸ்ரீ ராமர் பிறந்த நாள் அன்று இந்தியாவில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமநவமிக்கு அடுத்த நவமியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சீதையின் அவதாரம் நிகழ்ந்தது. சீதாதேவியின் அவதாரநாள் சீதாநவமி என அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் சீதாநவமி கொண்டாடப்படுவதில்லை. ஆனால் வடநாட்டில் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். எந்தத் துன்பத்திலும் மற்றவரின் நன்மையையே முன்னிறுத்தி வாழ்ந்தவரல்லவா சீதாபிராட்டி.

ஜனக மகாராஜா ஒரு கர்மயோகி. ஒருநாள் அவர் நிலத்தைக் கலப்பையால் உழுது கொண்டிருந்தபோது அதன் கொழுவில் ஏதோ இடறியது. என்னவென்று பார்க்க, அங்கே ஓர் பெட்டி. அதைத் திறந்தால் அழகிய பெண் குழந்தை ஒன்று அதற்குள் இருந்தது. கலப்பையை வடமொழியில் சீதா என்பார்கள். அக்குழந்தைக்கு ‘சீதா' எனப் பெயர் சூட்டி வளர்த்தார்.

கற்புக்கு அணியாக விளங்கிய சீதை இணையற்ற பெண்மணியாக ராமாயண இதிகாசத்தை அலங்கரிக்கிறாள். இராவணனால் அபகரித்துச் செல்லப்பட்டு அசோகவனத்தில் சிறையில் சீதை பட்ட துயரங்கள் சொல்லி முடியாது. தன் கணவன் வந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும், ஸ்ரீ ராமனின் பெருமை உயர வேண்டும் என எல்லாவற்றையும் அவள் சகித்துக் கொண்டு பொறுமையாக இருந்தாள்.

##Caption## அன்னையின் தியாகம், லட்சியம், தீரம் யாவும் சிறப்பானவை. எனவேதான் 'சீதாய சரிதம் மஹத்' (மகத்தானது சீதையின் சரிதம்) என்கின்றனர். இறுதியில் அவதார நோக்கம் முடிந்து பூமியிலே சங்கமம் ஆகிறாள். அப்போது ஸ்ரீராமர் சீதாதேவியை பற்றிப் பாடிய உருக்கமான ‘சீதா சகஸ்ரநாமம்' வடநாட்டில் மிகப் பிரபலம்.

ஜனகர் சீதையைக் கண்டெடுத்த இடம் சீதாமடி. இது பீஹாரில், பாட்னாவிலிருந்து 120.கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே உள்ள அழகிய கோவிலில் ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் மூலஸ்தானத்தில் உள்ளனர். ஜனகர் சீதையைக் கண்டெடுக்கும் காட்சி அழகிய சிற்பமாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிபோர்னியா

© TamilOnline.com