ஜெஸ்ஸி பால்
ஒரு மாதம் முன்புவரை இந்தியாவின் முன்னணி நிறுவனமான விப்ரோ டெக்னாலஜீஸின் முதன்மை மார்க்கெட்டிங் அலுவலராக (CMO) இருந்த ஜெஸ்ஸி பால் (Jessie Paul) அதைத் துறந்து Paul Writer என்ற சொந்த சந்தைப்படுத்தும் ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்குமுன் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் Global Brand Manager ஆக இருந்துள்ளார். இவர் எழுதிய No Money Marketing என்ற நூல் டாடா மெக்ரா ஹில் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தென்தமிழகத்தில் நாசரேத் என்ற சிறுநகரில் பிறந்து, NIT திருச்சி, IIM கொல்கத்தா ஆகியவற்றில் படித்தவர். அவரிடம் சில 'நறுக்' கேள்விகளும் 'நச்' பதில்களும்.

கேள்வி: நீங்கள் பெற்றுள்ள வெற்றிக்குக் காரணமான இரண்டு முக்கிய விஷயங்கள்?
பதில்: தமிழ் நாட்டின் தென்கோடியில் உள்ள நாசரேத் என்ற சிறுநகரத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது நான் அறிந்திருந்த பணிகள் பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர் என்பவைதாம். நான் கணிப் பொறியாளர் ஆனது தற்செயல்தான். ஒரு வருடம் வேலை செய்தபோது அது எனக்குப் பொருந்தி வருவதல்ல என்பது புரிந்தது. மார்க்கெடிங் செய்யத்தான் நான் விரும்பினேன். வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை என்று நான் கணிப்பொறியாளர் வேலையை விட்டேன்.

வாழ்க்கையில், நான் எதை விரும்பினேன் என்பதிலும் அதைக் கேட்பதிலும் தெளிவாக இருந்ததால் அவற்றைப் பெற முடிந்தது. கேட்டால்தான் பெறலாம் என்பது முக்கியமான பாடம்.

##Caption## கே: உங்களுக்கு உள்ளிருந்து செலுத்தும் ஊக்கம் எது? தனிவாழ்விலும் பணி வாழ்விலும் நீங்கள் அடைய எண்ணுவது என்ன?
ப: சந்தைப்படுத்தல் (மார்க்கெடிங்) தொடர்பான எதையும் நான் விரும்பிச் செய்கிறேன். 'நீ விரும்புகிற பணியை மேற்கொண்டால் அதற்குப் பின் நீ வேலை செய்ய வேண்டியிருக்காது' என்பதை நான் மிகவும் நம்புகிறேன். போன மாதம் விப்ரோ டெக்னாலஜீஸ் பதவியைத் துறந்து சொந்தமாக மார்க்கெடிங் ஆலோசனை நிறுவனத்தை (Paul Writer, India) தொடங்கினேன். இந்தியாவில் புத்தாக்கம் நிறைய உள்ளது, ஆனால் அதை நாம் சரிவரச் சந்தைப்படுத்தவில்லை. ஆலோசனை கூறல், தொழில்முறை மேம்பாடு, பயிற்சி இவற்றின் மூலம் நான் அதனைச் செய்ய முடியும் என நம்புகிறேன்.

கே: பெருநிறுவனம் ஒன்றில் மேலிடத்தில் இருந்துவிட்டு இப்போது தொழில்முனைவோராக மாறியிருக்கிறீர்கள். உங்கள் உந்துவிசை என்ன?
ப: தொழில்முறை ஏணியில் ஏறும் ஒவ்வொரு படியும் நீங்கள் அடையப்போகும் இலக்கை உங்கள் கைப்பிடியில் கொண்டுவர வேண்டும். 5 பில்லியன் டாலர் நிறுவனமான விப்ரோ டெக்னாலஜீஸில் நான் முதன்மை மார்க்கெடிங் அலுவலராகிவிட்டேன். விப்ரோ மிகவும் ஆற்றல் தரும் நிறுவனம். 'இலக்கைக் கைக்கொள்' என்ற பார்வையில் சுயதொழில் தொடங்குவது தர்க்கரீதியான அடுத்த அடியாகத் தோன்றியது. இந்த ஆண்டில் எனக்கு 40 வயதாகிறது. இந்த வாழ்க்கைக் கட்டத்துக்கும் சுயதொழிலே சரியாகப் பொருந்துகிறது.

கே: உங்கள் வாழ்க்கையின் மிகப் பெருமிதமான கணம் எது?
ப: 'No Money Marketing' என்ற என் நூலை டாடா மெக்ரா ஹில் வெளியிட்ட கணம்.

கே: இன்றைய பெண்மணிக்கு உங்கள் அறிவுரை என்ன?
ப: உங்கள் லட்சியங்களில் யதார்த்த நிலையோடு, தெளிவாக இருங்கள். அவற்றைப் பின்தொடரத் தயங்காதீர்கள்.

கே: வாசிக்க வேண்டிய சிலவற்றைச் சொல்லுங்கள்...
ப: முதலில் என்னுடையதையே சொல்கிறேன்: www.jessiepaul.com, No Money Marketing (Amazon.com-ல் கிடைக்கும்). பிறகு www.jimcollins.com-ல் 'the fox and the hedgehog story'யைப் படித்து, அது உங்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்று பாருங்கள்; www.sethgodin.com; 'The Daily Drucker' புத்தகம்.

கே: முக்கியமான வணிகப் பாடம்
ப: "மாறிகளைக் கட்டுப்படுத்து" ("Control your variables").

கே: நீங்கள் நினைவில் வைத்திருக்கும் ஒரு தலைவர், ஏன்?
நாராயண மூர்த்தி, ஃபனீஷ் மூர்த்தி, நந்தன் நிலேகனி, அரூப் காவன்--இவர்கள் எல்லோருமே என்னைச் செதுக்க நேரம் ஒதுக்கியவர்கள்.

கே: நீங்கள் படித்த புத்தகம் ஒன்றிலிருந்து மிகச் சிறந்த விஷயம் ஒன்று?
ப: 'The McKinsey Mind' நூலில் உள்ள The decision tree.

கே: கால மேலாண்மைக்குச் சிறந்த ஒரு வழி?
ப: டி.வி. பார்க்காதீர்கள்.

கே: மன அழுத்தம் நீக்கச் சிறந்த ஒரு வழி:
ப: கடைவீதிக்குப் போவது.

கே: நற்பண்பு ஒன்று?
ப: சந்தோஷமாக இருங்கள், பிறரை சந்தோஷப்படுத்துங்கள்.

கே: கருத்து மாறுபாட்டைத் தீர்க்க ஒரு வழி?
ப: கருத்துப் பரிமாற்றம்.

கே: வெளியூருக்குப் போகும்போது செய்யும் பிடித்த ஒரு செயல்?
ப: சிறிய உணவகங்களில் சாப்பிடுவது.

கே: நீங்கள் கவனிக்கும் பொருளாதாரப் பேரளவைகளில் ஒன்று?
ப: ரியல் எஸ்டேட் விலைகள்.

கே: சிற்றளவைகளில் ஒன்று?
ப: காய்கறி விலை.

கே: உங்கள் பிற்காலக் கனவில் ஒன்று?
ப: கடற்கரையில் ஓய்வுக் காலம்.

கே: நீங்கள் தலைமைப் பதவியில் இருப்பதைக் காட்டும் ஓர் அறிகுறி?
ப: வழிகாட்டுதலுக்குப் பிறர் முகத்தைப் பார்க்காதது.

கே: கற்கும் பொருட்டு டின்னரில் சந்திக்க விரும்பும் ஒரு நபர்?
ப: ரிச்சர்ட் பிரான்சன்.

கே: நினைவில் நின்ற ஓர் ஆசிரியர், ஏன்?
ப: அரூப் காவன், எனது முதல், நல்ல மேலாளர். செம்மையாகக் கருத்தை வெளிப்படுத்துவது எப்படி என்று எனக்குக் கற்பித்தார்.

அம்பாள் பாலகிருஷ்ணன்

© TamilOnline.com